
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு மேற்கொள்ளப்படும் என தி.மு.க தலைவரும், தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” பின்வருமாறு அமைக்கப்படுகிறது.
அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.