Skip to main content

’நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை’ - அஜீத்குமார்

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
a

 

அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து, அஜித் அவசர அவசராக அறிக்கை வெளியிட்டுள்ள அதில் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில  வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

 

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயப்பாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

 

இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்ன வென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

 


அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

 

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடைமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு’’என்று தெரிவித்துள்ளார்.

 

a


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விடாமுயற்சி’யில் இறங்கும் அஜித்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

Ajith embarks on 'vidamuyarchi'; Official notification released

 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான அஜித்குமார் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக கடைசியாக 'துணிவு' என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார். 

 

விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் 52வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 

மே 1 அன்று (01.05.2023) மாலை டைட்டிலுடன் 'ஏகே 62' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கடந்த சில தினங்கள் முன் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என அஜித் இந்த அறிவிப்பை வெளியிட படக்குழுவிடம் சொன்னதாக திரைவட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாகவே வெளியாகியுள்ளது. 

 

அஜித்தின் 62ஆவது படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெயர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என்பது குறித்தான தகவல்கள் மட்டுமே போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. பைக் சுற்றுப்பயணம் முடித்து வந்து அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

 

 

 

Next Story

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Actor Ajith's father passed away

 

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அண்மையில் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு  அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” எனக்கூறி இருந்தார். 

 

கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும் இது அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் தகவல்கள் வெளியானது நினைவுகூறத்தக்கது. 

 

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.