Skip to main content

அதிமுக ஆட்சி தானாகவே முன்வந்து பதவி விலகிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018


 

mkstalin


தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் ஓர் இருண்ட பக்கத்தை அதிமுக ஆட்சி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டை வஞ்சித்து, தொழில்துறையையும் சீரழிக்காமல், இந்த ஆட்சி தானாகவே முன்வந்து பதவி விலகிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

’பலவீனமான தலைமையின் கீழ் செயல்படும் அதிமுக அரசால், தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு வரலாறு காணாத சரிவை சந்தித்து இருக்கிறது’, என வெளிவந்துள்ள மத்திய அரசின் ஆய்வறிக்கை, அதிமுக அரசின் நிர்வாக அவலட்சணத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒருபங்கு மதிப்பிலான முதலீட்டைக்கூட 2017 ஆம் ஆண்டில் பெறமுடியாமல், தொழில் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பும், மாநிலத்தின் முன்னேற்றமும் அதிமுக ஆட்சியில் பெருமளவில் கேள்விக்குறியாகி விட்டதை எண்ணி மிகுந்த கவலையுறுகிறேன்.
 

மத்திய அரசின் “டிபார்ட்மென்ட் ஆப் இன்டஸ்ட்ரியல் பாலிஸி அண்ட் ப்ரமோஷன்” துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் 1,574 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே பெற்று மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எல்லாம் பின்னால் தமிழ்நாடு இருப்பது, மாநில தொழில்துறை வளர்ச்சி அத்தியாயத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவாக இருக்கிறது. கழக ஆட்சி இருந்தபோது, தொழில் தொடங்க மாநிலத்தை நாடிவந்த முதலீட்டாளர்கள் எல்லாம் இன்றைக்கு அண்டை மாநிலங்களுக்கு ஓடிப் போகிறார்கள் என்பது மனவேதனை அளிப்பதாக இருக்கிறது. 2017-ஆம் வருடத்தில் போடப்பட்ட 62 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ஐம்பது சதவீதம் கூட முதலீடுகளாக மாற்ற முடியாமல் தவிக்கும் அதிமுக அரசு, 9 நிறுவனங்களிடமிருந்து மட்டுமே முதலீடுகளை பெற முடிந்திருக்கிறது என்ற தகவல், செல்லரித்துப் போன நிர்வாகத்தின் அடையாளமாக இருக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் முதலீடுகளை கவருவதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்காமல், முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க நம்பிக்கையையும் கொடுக்காமல், ஊழல் புரிவதற்காக பதவியில் நீடித்தால் போதும் என்ற மனநிலையில் மாநிலத்தின் நலனை அடகுவைப்பது கடும் கண்டனத்திற்குரியது. கமிஷன் கலாச்சாரத்தால் ஏற்கனவே பல தொழில் முதலீட்டாளர்களை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துவிட்ட இந்த ஆட்சியாளர்கள், மறுசீரமைக்க முடியாத இன்னும் என்னென்ன அழிவுகளை ஏற்படுத்திவிட்டுப் போகப் போகிறார்களோ என்ற அச்சமே நெஞ்சைக் குடைகிறது. குறிப்பாக, “பலவீனமான அரசாக இருப்பதால் முதலீட்டாளர்களை தமிழ்நாடு அரசால் கவர முடியவில்லை” என்று அசோசம் பொதுச்செயலாளரே பேட்டியளித்திருப்பதைப் பார்த்தால், தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் அதிமுக ஆட்சி ஓர் இருண்ட பக்கத்தை உருவாக்கி விட்டது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

 

“எடுபிடி” அரசாக செயல்படுவதும், அமைச்சரவையில் உள்ளவர்கள் யாருக்கும் எவ்வித கூட்டுப்பொறுப்பும் இல்லாமல் தான்தோன்றித் தனமாகப் பேட்டியளிப்பதும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள டெண்டர்களை பங்கிட்டுக் கொள்வதும், ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தும், காவல்துறை நிர்வாகம் கறைபடிந்தும் நிற்பது, மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கினாலும் ஏற்றுக் கொண்டு, மத்திய அரசுக்கு அயராமல் காவடி தூக்குவதும், அதிமுக ஆட்சியாளர்களின் குணாதிசயங்களாக மாறிவிட்டது மட்டுமல்ல, ஒரே நிர்வாகப் பணியாகவே மாறிவிட்ட கொடுமை அரங்கேறிவிட்டது.

 

பொறுப்பற்ற முறையில் மாண்புமிகு முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆட்சி செய்வதால் “பொறுப்புள்ள அரசு மாநிலத்தில் இல்லை” என்ற செய்தி நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை சென்றடைந்து விட்டது. அதனால், “முதலீட்டாளர்களை ஈர்க்க துபாயில் சாலை கண்காட்சி நடத்துவதோ”, “இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டை கூட்டுவதோ”, தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு எவ்வித விமோசனமும் பிறக்கப்போவதில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்விலும் ஓளி வீசப்போவதில்லை.

 

ஆகவே, “அமைதி, வளம், வளர்ச்சி” என்று வெளுத்துப்போன முழக்கத்தை தூக்கியெறிந்து விட்டு, எஞ்சியிருக்கின்ற நாட்களிலாவது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்கவும், கமிஷன் கலாச்சாரத்தை அறவே தவிர்த்து, புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொறுப்புள்ள அரசு நிர்வாகத்தை அதிமுக அரசு அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

இன்னொரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு முன்பு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு தொழில்துறையில் பின்தங்கி விட்டதை மாற்றியமைக்க மாண்புமிகு முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் தமிழ்நாட்டை வஞ்சித்து, தொழில்துறையையும் சீரழிக்காமல், இந்த ஆட்சி தானாகவே முன்வந்து பதவி விலகிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.