Skip to main content

“அனைவரும் அடித்து உடையுங்கள் என்றார் ஓ.பி.எஸ்.” - சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

ADMK MP CV Shanmugam addressed press

 

அதிமுக அலுவலகத்திலிருந்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஆவணங்கள் உட்பட பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் புகார் கொடுத்தார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஜெ.சி.டி. பிரபாகர், அதிமுகவிலிருந்து முன்னமே நீக்கப்பட்டு, அதிமுகவுக்கு சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபரான புகழேந்தி உட்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில், 300 பேர் கொண்ட ரவுடிகள், குண்டர்கள், சமூக விரோதிகள் ஆகியோர் கையில் கத்தி, கடப்பாரை, தடி, கற்களோடு வந்தனர். தனது பிரச்சார வாகனத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் அடித்து உடையுங்கள்’ என்று சொல்லிக்கொண்டே, அலுவலக சாலையில் இருந்த வாகனங்களை உடைத்து, அங்கிருந்த பொதுமக்களைத் தாக்கினர். மேலும், அங்கு வந்திருந்த அதிமுகவினரை கத்தியால் வெட்டியும், குத்தியும், தடியால் தாக்கியும் அலுவலகம் அருகே வந்தனர். 

 

ADMK MP CV Shanmugam addressed press

 

தலைமை அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடையுங்கள் என ஓ.பி.எஸ். சொல்லி, அதனை உடைத்து அவரின் ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றுள்ளார். இது அனைவருக்கும் தெரியும். 

 

இந்தியாவில் பல்வேறு கட்சியில் இதுவரை உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு, பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. பிறகு ஒன்றிணைந்து இருக்கிறாகள். அல்லது தனிகட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிமுகவில் 1988ல் ஏற்பட்ட ஜெயலலிதா, ஜானகி பிளவின்போது அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. யாரும் இந்த அளவுக்கு தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழையவில்லை. அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று அதிமுகவில் பெரும்பான்மையையும், தொண்டர்களிடத்தில் நன்மதிப்பையும் இழந்த ஓ.பி.எஸ். அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று சீல் வைக்க காரணமாக இருந்துள்ளார். 

 

எந்த வாகனத்தில் ஓ.பி.எஸ். தலைமை அலுவலகத்திற்கு வந்தாரோ அதே வாகனத்தில், அலுவலகத்தினுள்ளே இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் தலைமை அலுவலக ஆவணங்களை எடுத்துசென்றார். இதுவும் அனைவருக்கும் தெரியும். 

 

11ம் தேதி இரவே எங்கள் மா.செ. ஆதிராஜராம், தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். ஆனால், இன்று வரை காவல்துறை அந்தப் புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னதாக 8ம் தேதி எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சமூக விரோதிகளால் தலைமை அலுவலகத்திற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று புகார் கொடுத்தார். ஆனால், காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை. 

 

11ம் தேதி காவல்துறையின் பாதுகாப்போடு அந்த சம்பவங்கள் நடைபெற்றது. 32 ஆண்டு தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக தலைமை அலுவலகம் திமுக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்தியாவிலே இதுவரையில் எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக சரித்திரமே இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.