![tamil media people in srilanka](http://image.nakkheeran.in/cdn/farfuture/YjeuXgDrOiQHdJNKioa_51NaKFkPe3GPT9eC-_50uHo/1602765429/sites/default/files/inline-images/fsg.jpg)
இலங்கையில் தொடரும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் தமிழ் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட பத்திரிகையாளர்கள் இருவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக விரோதிகளால் தாக்கப்பட்டனர். அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் செய்தியாளர்கள் 15ஆம் தேதி வியாழக்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டதை நடத்தியுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன்பு தனி மனித இடைவெளியை கனடபிடித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
செய்தியாளர்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினராலும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை அரசு பறிக்க வேண்டாம், இலங்கையில் அதிகரித்து வரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.