Skip to main content

எனது மகனின் கனவை நிறைவேற்றிவிட்டேன்: ஒரு தந்தையின் ஆனந்த கண்ணீர்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

இணையத்தில் இன்று காலை முதல் பேசு பொருளாக இருப்பது குஜராத் மாநிலத்தில் மணமகள் இல்லாமல் நடைபெற்ற ஒரு திருமணம் தான். அனைத்து சடங்குகளும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு நடந்த இந்த திருமணத்தில் ஒரே ஒரு விசித்திரம், இதில் மணப்பெண் இல்லாதது தான்.

 

story behind the gujarati marriage held without bride

 

 

மாப்பிள்ளை மட்டுமே இருந்த இந்த திருமணம் இணையத்தில் வைரலாக நிலையில், 90'ஸ் கிட்ஸின் திருமணமாக இருக்கும், அவர்களுக்கு தான் இப்படி நடக்கும் என சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டது. ஆனால் இந்த திருமணத்திற்கு பின்னால் உள்ள நெகிழ்ச்சியான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

27 வயதான மணமகன் அஜய் பரோட்டின் தந்தை இது குறித்து கூறுகையில், " சிறுவயது முதல் எனது மகனுக்கு கற்றல் குறைபாடு உள்ளது. அதனுடனேயே வளர்ந்த அவன், தனது உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக காணப்படுவான். மற்றவர்களின் திருமணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய அவன் ஒரு நாள், எனக்கு எப்போது இப்படி திருமணம் செய்து வைப்பீர்கள் என கேட்டான். இதனையடுத்து அவனது ஆசையை நிறைவேற்ற அவனுக்கு சில இடங்களில் பெண் தேடியும், எதுவும் ஓத்துவராததால் மணப்பெண் இல்லாமலே திருமணம் செய்ய முடிவு எடுத்தோம். இது அவனின் மகிழ்ச்சிக்காக நடைபெறும் திருமணம். எனவே இது குறித்து உறவினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்தோம்.

இதனையடுத்து அனைத்து குஜராத்தி சடங்குகளையும் முறையாக செய்வது எனவும், மணமகள் மட்டும் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்துவது எனவும் முடிவெடுத்தோம். அதன்படி தற்போது இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. என் மகன் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறான். சிறு வயதிலேயே தனது தாயை இழந்த எனது மகனின் இந்த கனவை நான் நிறைவேற்றியுள்ளேன். இது எனக்கு மிகப்பெரிய மன நிம்மதியை தருகிறது" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்