Skip to main content

மகனை கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற பெண் தொழிலதிபர்; பதற வைக்கும் ஹோட்டல் அறை கொலை சம்பவம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Shocking hotel room incident

நான்கு வயது மகனை பெற்ற தாயே கொலை செய்து சூட்கேஸில் வைத்து உடலை பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர், கொல்கத்தாவில் முதுகலை படிப்பை தொடர்ந்ததோடு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றி வந்தார். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றவர் .

பெங்களூருவில் ஏஐ லேப் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். கடந்த ஆறாம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தன்னுடைய நான்கு வயது மகனுடன் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார் சுசனா சேத். இந்நிலையில் நேற்று ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு அவசரமாக பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை பராமரிப்பு செய்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கரை இருந்ததை கண்டு அதிர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஹோட்டல் அறைக்கு வரும் பொழுது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும்போது தனியாக சென்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திலும் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஹோட்டலில் இருந்து கிளம்பிய சுசனா சேத்தை செயலி மூலம் பின் தொடர்ந்தனர். அதேபோல் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் ஹோட்டலுக்கு மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும் பொழுது தனியாக சென்றது உறுதியானது.

மேலும் ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, சுசனா சேத் பெங்களூர் செல்ல ஒரு வாடகை கார் வேண்டும் என ஹோட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு விமான டிக்கெட் மிகவும் குறைவு தான் எனவே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் ஹோட்டல் ஊழியர்கள். ஆனால் நான் காரில் தான் பயணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார் சுசனா சேத். அதன்படி வாடகை காரில் கையில் தூக்க முடியாமல் சூட்கேஸ் ஒன்றை சுசனா சேத் எடுத்து சென்றுள்ளார்.

உடனடியாக அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீசார் உங்களுடைய மகன் எங்கே விசாரித்தனர். அதற்கு சுசனா சேத் மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக தெரிவித்து ஒரு முகவரியை சொல்லியுள்ளார். முகவரியை சென்று பார்த்த பொழுது அது போலி முகவரி என்று தெரியவந்தது. இதனால் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார் என்பது தெரிய வந்தது. அவர் செல்போன் மூலம் ட்ராக் செய்ததில் கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

Shocking hotel room incident

தொடர்ந்து காரின் டிரைவரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு செல்போன் மூலமே போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கார் சென்றது. காரை சோதனை செய்தபோது காரில் இருந்த பெரிய சூட்கேஸில் சுசனா சேத்துவின் மகன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே தன்னுடைய மகனை கொன்று விட்டு உடலை சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.