
சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்திருந்தது மத்திய அரசு. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள், இந்திய அரசின் புதிய கட்டுபாடுகளை ஏற்று அதன்படி நடக்கத் துவங்கியிருக்கின்றன. ஆனால், ட்விட்டர் மட்டும் விதிகளை ஏற்பதில் காலதாமதம் செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டற்ற அதிகாரங்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டிருக்கும் சமூக ஊடகங்களுக்கு எதிராக பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்குச் சென்றன. இந்த நிலையில், அதனைப் பரிசீலித்து, சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த 26ஆம் தேதி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு.
குறிப்பாக , குறைதீர்க்கும் அலுவலர், கட்டுப்பாட்டு அலுவலர், தலைமை குறைதீர்க்கும் அலுவலர் ஆகியோரை நியமிக்க வேண்டும்; அவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்; அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் தொடர்பு எண்களையும் தங்களின் சமூக ஊடக பக்கங்களிலேயே வெளியிட வேண்டும்; புகார்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல லட்சம் பயனாளர்களை வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டன. அதன்படி, தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பின்பற்றத் தொடங்கியுள்ளன. ஆனால், இன்றுவரை (31.5.2021) ட்விட்டர் மட்டும் புதிய விதிகளைப் பின்பற்றத் துவங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.