Skip to main content

"மூன்றாவது டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்" - சீரம் நிறுவனத் தலைவர் வேண்டுகோள்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

cyrus poonawalla

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலான அளவில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அண்மையில் ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா, மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது ஆராய்ச்சி நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, "காலப்போக்கில் நோயெதிர்ப்பு சக்தி குறையுமென்பதால், நமக்குப் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். உருவாகிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். பூஸ்டர் டோஸ்கள் ஏற்கனவே சோதனையில் இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா, தானும் சீரம் நிறுவனப் பணியாளர்களும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆன்டிபாடிகள் குறைந்துவிடும். அதனால்தான் நான் மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டுள்ளேன். எங்களது ஏழு முதல் எட்டாயிரம் சீரம் நிறுவன ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் செலுத்தியுள்ளோம். இரண்டு டோஸை செலுத்திக் கொண்டவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் (மூன்றாவது டோஸ்) செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" எனக் கூறியுள்ளார்.

 

கரோனா மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ள இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்காத நிலையில், தானும் தனது நிறுவனத்தைச் சேர்ந்த எட்டாயிரம் ஊழியர்களும் மூன்றாவது டோஸை செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை மிகவும் மோசமான நடவடிக்கை என விமர்சித்துள்ள சைரஸ் பூனாவல்லா, "இந்த விவகாரத்தில் வாயைத் திறக்காதே என எனது மகன் (ஆதார் பொனாவல்லா) கூறினார். ஆனால் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்பதே என்னுடைய கருத்து" எனவும் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்