Skip to main content

”மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்” - ராஜீவ் காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

rahul gandhi

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவுதினத்தை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நாடு முழுவதும் இன்று அனுசரித்து வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

 

இந்த நிலையில், தன்னுடைய தந்தையின் மறைவுதினத்தை நினைவுகூரும் வகையில் ராகுல் காந்தி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், ”என்னுடைய தந்தை தொலைநோக்கு சிந்தனையுடைய தலைவர். அவரது சிந்தனைகள் நவீன இந்தியாவை உருவாக்குவதில் துணைபுரிந்தன. அவர் மிகவும் இரக்கமுள்ள, கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் சிறந்த தந்தையாக இருந்தார்.மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். அவருடன் நான் செலவழித்த நாட்களை அன்புடன் நினைவுகூருகிறேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவைப் புரிந்து கொள்ள  நினைக்கும் போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன்'  -நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Whenever I think to understand India, I look at Tamil Nadu' - Rahul Gandhi's speech in Nellai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வந்துள்ளார். சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவை செல்ல இருக்கிறார்.

நெல்லை வந்துள்ள ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில்  இந்தியா கூட்டணி சார்பில்  நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 நாடாளுமன்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழகத்தையும், தமிழக மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.  தமிழகத்தை விரும்புவதால் தான் எனது யாத்திரையை  நான் குமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாச்சாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டின் ஆளுமைகள். ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூக நீதி மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் மோதல் இந்தத் தேர்தல். நம்மைப் பொறுத்தவரை இந்தியாவின் எல்லா கலாச்சாரமும் பண்பாடும் மிகப் புனிதமானது என்று கருதுகிறோம். ஆனால் அவர்களோ ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள். இதனுடைய முடிவு என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்களில் 83% பேர் வேலையில்லாமல் திண்டாட்டத்தை சந்தித்துள்ளார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு தொடரும். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கும்  வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றப்படும். வந்த உடனே காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு, மீனவர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. ஆனால் நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70% மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை  அதானியிடம் ஒப்படைக்கிறார் மோடி. நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்எஸ்எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றுவேன் என்கிறது பாஜக'' என்றார்.

Next Story

கைலாசாவில் பாஜக எம்பிக்கள் - போட்டுடைத்த கடலூர் இள.புகழேந்தி!

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Ela Pugazhendi interview

 

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி எடுத்து வைக்கிறார்

 

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து திமுகவினர் இழுத்ததாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அவருக்கு எந்த வரலாறும் தெரியவில்லை. அப்போது நான் சட்டமன்றத்தில் இருந்தேன். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அன்று அதிமுகவினர் சபைக்கு வந்தனர். பட்ஜெட் உரையைப் படிப்பதற்கு அன்றைய முதல்வர் கலைஞர் தயாராக இருந்தார். அப்போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் மனநிலை கொண்ட துக்ளக் சோ.ராமசாமியின் வழிகாட்டுதல்படி ஜெயலலிதா செயல்பட்டார். 

 

நடப்பது நடக்கட்டும் என்று கலைஞர் அப்போது அமைதியாக இருந்தார். அப்போது ஜெயலலிதா தன்னுடைய முடியைத் தானே கலைத்துக்கொண்டார். தன்னுடைய சேலையைத் தானே இழுத்துக்கொண்டு அலங்கோலமாக தன்னை மாற்றிக்கொண்டார். திமுகவைச் சார்ந்த யாரும் அவர் அருகில் கூட செல்லவில்லை. நடக்காத ஒன்றை நடந்தது போல் இந்தியா முழுவதும் பரப்பி திமுக மீது அவதூறு செய்து வருகின்றனர். இழிவான ஒரு நாடகத்தை அன்று நடத்தியவர் ஜெயலலிதா. வெளியே சென்று பத்திரிக்கையாளர்களிடம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக பேட்டி கொடுத்தார்.

 

நிர்மலா சீதாராமன் விவரம் தெரியாமல் பொய் பேசிக்கொண்டு திரியக்கூடாது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் பாஜகவினர் இழுத்து வருகின்றனர். அது பற்றி நிர்மலா சீதாராமனால் பேச முடியவில்லை. ஒரு நிதியமைச்சராக இருக்கும் அவர், மதிகெட்டு அலையக்கூடாது. உண்மையைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்குகிறார். அவரை இவர்களால் பிடிக்க முடியவில்லை. கைலாசாவுக்கு அதிகம் சென்று வருவது பாஜகவினர் தான். 

 

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அனைத்தையும் மிகச்சரியாக செய்து வரும் ராகுல் காந்தி குறித்து ஏதாவது அவதூறு பரப்ப வேண்டும் என்று பாஜகவினர் காத்திருந்தனர். சென்று வருகிறேன் என்பதைத் தான் சைகையில் ராகுல் காந்தி சொன்னார். பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் தான் அதை அவர் தெரிவித்தார். அதை இவர்கள் பெண்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாக இழிவாக மடைமாற்றினர். வெட்கமாக இல்லையா? அவர் மீது புகார் கொடுத்த பாஜக எம்.பிக்களில் பாதி பேர் இது வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

 

குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. நீதித்துறையை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். அதை நினைவுபடுத்தும் விதமாகவே ஆ.ராசா பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசினார். "நீங்கள் பேசினால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்று மத்திய அமைச்சராக இருக்கும் மீனாட்சி லேகி என்பவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்டினார். அமலாக்கத்துறையை இவர்களுடைய வேலைக்காரர்கள் போல் பயன்படுத்துகிறார்கள். பாசிச வெறிபிடித்த இவர்களின் செயல்பாடுகளை ஆ.ராசா தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.