Skip to main content

"இறப்புச் சான்றிதழ்களிலும் உங்கள் படத்தைப் போடுங்கள் பிரதமரே!" - மம்தா கடும் தாக்கு!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

mamata

 

இந்திய மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச் செய்வது சுய விளம்பரம் என்றும், அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

 

மேலும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், கரோனா தடுப்பூசிச் சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது. இந்தநிலையில், அண்மையில் கரோனா தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்படுவது அவசியமா, அது கட்டாயமா என மாநிலங்களவையில் கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், "கரோனா பாதுகாப்பு நடத்தை, தொற்று நோய்ப் பரவாமல் தடுக்கும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய அவரது செய்தி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும், கரோனா பாதுகாப்பு நடத்தையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வலுவான செய்தியைத் தருகிறது" எனத் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, தடுப்பூசிச் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியிடப்படுவதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கரோனா தடுப்பூசிச் சான்றிதழில் உங்கள் புகைப்படம் போடப்படுவதை நீங்கள் (மோடி) கட்டாயமாக்கினீர்கள். கரோனா இறப்புச் சான்றிதழிலும் உங்கள் புகைப்படத்தைப் போடுங்கள்" எனக் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசிடமிருந்து மேற்குவங்கத்திற்கு தடுப்பூசி போதுமான அளவில் வரவில்லை எனவும் மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்