Skip to main content

மத்திய அரசின் உத்தரவாதத்தை நம்பாத விவசாயிகள் - போராட்டத்தை தொடர முடிவு!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

farm movement

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு வருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

 

இந்தச் சூழலில் மத்திய அரசு விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தது. அதுதொடர்பாக நேற்று (07.12.2021) ஆலோசித்த விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்துவரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, "நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகே, விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று அரசாங்கம் கூறுகிறது. நாங்கள் அதைப் பற்றி அச்சப்படுகிறோம். வழக்குகளைத் திரும்பப் பெறும் நடைமுறையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் (போராட்டத்தை கைவிடுவது) இறுதி முடிவு எடுக்கப்படும். 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாப் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறோம். பஞ்சாப் அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் இழப்பீடு மற்றும் வேலை என்பதை இந்திய அரசும் செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்தது.

 

இந்நிலையில் இன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் ஐந்து பேர் கொண்ட கமிட்டியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான குர்னாம் சிங் சாருனி, "எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும். நாங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றால் எங்களுக்கு அது பிரச்சனையாக இருக்கும். வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

 

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஐவர் கமிட்டியின் இன்னொரு உறுப்பினர் அசோக் தவாலே, "அரசின் முன்மொழிவில் சில குறைபாடுகள் இருந்தன. எனவே நேற்று இரவு, சில திருத்தங்களுடன் அதைத் திருப்பி அனுப்பினோம். அதில் அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகு எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அரசு கூறியது தவறு. குளிரில் இங்கே உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பிடித்தமான ஒன்றல்ல. அவர்கள் (மத்திய அரசு) மின்சார மசோதாவை திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் இப்போது அவர்கள் அதைப் பங்குதாரர்களுடன் விவாதித்து, பின்னர் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள். இது முரண்பாடானது" என கூறியிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.