
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சஹாதத் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கும், ஷிவானி என்ற பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 8ஆம் தேதி ஜோடி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின், மணமகன் பிரதீப் வீட்டில் திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் நடந்தது. இதையடுத்து, அன்றைய இரவு தம்பதி இருவரும் முதலிரவுக்காக அறைக்குச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை, வெகு நேரமாகியும் அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதில் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறை கதவை தட்டி பார்த்துள்ளனர். உள்ளே இருந்து எந்தவித பதிலும் வராததால், கதவை உடைத்துப் பார்த்துள்ளனர்.
அப்போது அங்கு, மணமகள் ஷிவானி உயிரற்ற நிலையில் கட்டிலில் பிணமாகக் கிடந்துள்ளார். மேலும், மணமகன் பிரதீப் தூக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தம்பதிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷிவானியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு பிரதீப் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து முடிந்து சில மணி நேரங்களிலேயே புதுமண தம்பதி பிணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.