Skip to main content

"நான் தமிழ் மொழியின் அபிமானி"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 27/06/2021 | Edited on 27/06/2021

 

 

maankibaat pm narendra modi speech

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி வார ஞாயிற்றுக்கிழமைகளில் 'மான் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று (27/06/2021) காலை 11.00 மணிக்கு வானொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.

 

அப்போது பிரதமர் கூறியதாவது, "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும் போது ஒரு சாம்பியன் உருவாகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என மில்கா சிங்கிடம் பேசியிருந்தேன். கரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு நபரும் தனது பங்களிப்பை அளித்துள்ளனர். நான் உலகிலேயே பழமையான தமிழ் மொழியின், தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி.

 

தமிழ் மொழியின் மீதான என்னுடைய அன்பு என்றுமே குறையாது; தமிழ் மீது மிகவும் பெருமிதம் பொங்குகிறது. தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவியின் பயிற்சிக்காக, அவரது தாயார் தனது நகைகளை அடமானம் வைத்துள்ளது நெகிழ்ச்சியளிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் போராடி வந்திருக்கிறார்கள். கரோனா தடுப்பூசிப் போட்டால் காய்ச்சல் வருவது சாதாரண விஷயம் தான். ஆனால் தடுப்பூசிப் போடாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும்." இவ்வாறு பிரதமர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பற்றி எரியும் மணிப்பூர்; மனதின் குரலில் மௌனம் காத்த பிரதமர் 

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

PM Modi avoids Manipur in manki bath program

 

பிரதமர் மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி அமெரிக்க செல்லவுள்ளதால் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

 

அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியை ஒருபோதும் மறக்கமுடியாது. அந்த நாளில் தான் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றின் கருப்பு பக்கமாக அது அமைந்தது. லட்சக்கணக்கானோர் அவசரநிலையை முழு மனதுடனும் எதிர்த்தனர். அப்படி எதிர்த்தவர்கள் பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்” என்றார். 

 

இதனைத் தொடர்ந்து, காசநோய் ஒழிப்பதில் இந்தியா பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளேன் என்று கூறினார். ஆனால் பலரும் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் மவுனம் காத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

 

பாஜக தலைமையிலான ஆட்சி நடந்துவரும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்றார். அந்த சமயம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அதன்பிறகு அங்கு அமைதி நிலைமை திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரக்காரர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக மணிப்பூர் சென்று இரு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் அங்கி மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.  இதில், பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  பின்னர் தொங்ஜு என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர். 

 

“இன்னொரு மன்கிபாத் மணிப்பூர் பற்றி மௌனமாக முடிந்துள்ளது. பேரிடர் மேலாண்மையில் சிறந்த திறனைப் பற்றி பெருமை பேசும் பிரமர் மோடி, முழுக்க மனிதனால் நடக்கும் மணிப்பூர் பேரிடர் பற்றி என்ன நினைக்கிறார். இன்னமும் அவரிடம் இருந்து அமைதிக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. பிஎம் கேர் நிதியைத் தணிக்கை செய்யாதது போல், மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்படாமல் இருப்பது சந்தேக கேள்வியை எழுப்புகிறது” எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  இப்படி மணிப்பூர் மாநிலமே பற்றி எறியும் சூழலில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் அது தொடர்பாகப் பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தது பலரும் ஏமாற்றியுள்ளது. 

 

 

Next Story

"எனக்கும் தண்டனை வழங்கப்படுமா?" - பிரதமரின் நிகழ்ச்சியை விமர்சித்த மஹூவா  

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

mahua moitra criticized PM Modi's show

 

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. இந்த 100வது சிறப்புப் பகுதியை பொதுமக்கள் அனைவரும் கேட்பதற்காக மத்திய அரசும் பாஜகவும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

 

இதனிடையே முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய செவிலியர் கல்வி நிறுவனங்களுக்கு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்டாயம் கேட்க வேண்டும் என மாணவர்களுக்குத்  தெரிவித்திருந்தது. மேலும், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மாணவிகள் கட்டாயம் கேட்க வேண்டும் என்றும், இந்த நிகழ்வு வல்லுநர்கள், அறிஞர்களை அழைத்து வந்து நடத்தும் கவுரவ விரிவுரையின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தின் 36 மாணவிகளை பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்காததற்காக ஒரு வாரத்திற்கு விடுதியில் இருந்து வெளியே செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

 

இது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மேற்கு வங்க நாடாளுமன்ற எம்.பி மஹூவா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை நான் இதுவரை கேட்டதே இல்லை. ஒருமுறை கூட கேட்கவுமில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. அதனால் எனக்கும் தண்டனை வழங்கப்படுமா? ஒரு வாரத்திற்கு நான் என் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்படுமா? இப்போது மிகவும் கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.