குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தநிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் நேற்று மத்தியபிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கமல்நாத்தின் வயதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார். இதற்கு கமல்நாத் தரப்பில் தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மத்தியபிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "என்ன எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்கப்போவதில்லை, சிஏஏவை அமல்படுத்தியே தீருவோம். மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத், அவரது மாநிலத்தில் சிஏஏ அமலாக்கப்படாது என உரத்தக் குரல் எழுப்புகிரார். கமல்நாத்ஜி இது உங்கள் குரலை எழுப்புவதற்கான வயதல்ல. இந்த வயதில் இப்படி கத்துவது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. மத்தியப் பிரதேச பிரச்சினைகளை முதலில் தீருங்கள்" என கிண்டல் செய்யும் விதமாக பேசினார்.
இதற்கு பதிலளித்துள்ள கமல்நாத், "மக்களுக்கு வயது முக்கியமல்ல, பணிதான் முக்கியம். ஓராண்டில் எங்கள் அரசு எப்படி பணியாற்றுகிறது என்பதைக் காட்டியுள்ளோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து நாங்கள் ஏமாற்றுவதல்ல. கொடுத்த வாக்குறுதிகளை செய்து முடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். மக்கள் என் பணியைத்தான் பார்க்கின்றனரே தவிர என் வயதையல்ல. இந்த முதியவன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.