
பத்திரிகையாளர் ஒருவரை விபத்து ஏற்படுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சிதாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா பஜ்பாய் (35). இவர் அம்மாநிலத்தில் உள்ள தனியார் பத்திரிகை ஒன்றில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வந்தார். தகவல் அறியும் உரிமை ஆர்வலராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராகவேந்திரா பஜ்பாய் கடந்த 8ஆம் தேதி லக்னோ- டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் பைக் மீது மர்ம நபர் சிலர் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ராகவேந்திரா உடல் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
உயிரிழந்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் உடலில் இருந்து மூன்று துப்பாக்கி குண்டுகளை கண்டெடுத்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மகோலி, இமாலியா, கோட்வாலி ஆகிய இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.