Skip to main content

"எனது தந்தை ஒரு ஹீரோ" - பிரிகேடியர் லிட்டரின் மகள் பெருமிதம்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

ls lidder

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் மேலும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

 

இதனைத்தொடர்ந்து நேற்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களின் உடல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதைச் செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

 

இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லிட்டரின் உடலுக்கு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் பிரிகேடியர் லிட்டருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் இராணுவ உயரதிகாரிகள் பிரிகேடியர் லிட்டருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர்  லிட்டரின் உடல் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

இதன்பிறகு பேசிய பிரிகேடியர் லிட்டரின் மனைவி, "நாம் அவருக்கு நல்லமுறையில் பிரியாவிடை அளிக்க வேண்டும்... புன்னகையுடன் வழியனுப்ப வேண்டும்... நான் ஒரு இராணுவ வீரரின் மனைவி. இது எங்களுக்கு பெரிய இழப்பு" என கலங்காத மனவுறுதியுடன் தெரிவித்தார்.

 

அதேபோல் லிட்டரின் மகள், "எனக்கு 17 வயதாகப் போகிறது.  அவர் என்னுடன் 17 வருடங்கள் இருந்துள்ளார். அந்த இனிய நினைவுகளுடன் எங்கள் குடும்பம் முன்னே செல்வோம். இது தேசத்திற்கே இழப்பு... என் தந்தை ஒரு ஹீரோ... எனது சிறந்த நண்பர். ஒருவேளை இது விதியாக இருக்கலாம். சிறந்த விஷயங்கள் எங்கள் வாழ்வில் நடக்கும்.. அவர் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தார்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்