Skip to main content

 சந்திரபாபு நாயுடுவின் மனு விசாரணை; நீதிமன்றம் உத்தரவு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Hearing of Chandrababu Naidu's petition; Court order

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு  09/09/2023 அன்று கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆந்திராவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

 

தொடர்ந்து அவரது உடல்நிலை உள்ளிட்ட மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீது நடந்த விசாரணையில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும், அவர் எந்தவித நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 52 நாட்களுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியே வந்திருந்தார். 

 

இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், வரும் நவம்பர் 28ஆம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில் வழக்கு இன்று (20-11-23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடுவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்குமாறு நீதிமன்றத்தில் வாதிட்டார். 

 

இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. மேலும், அவர் நவம்பர் 30ஆம் தேதி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும், இந்த வழக்கு குறித்து எந்த ஒரு தகவலையும் சந்திரபாபு நாயுடு பொது வெளியில், வெளியிடக் கூடாது என்று கூறி உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்