Skip to main content

நீட் விவகாரம்; கண்டிக்கும் ஆளுநர் தமிழிசை 

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Governor Tamilisai spoke about the NEET Masters examination

 

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், “நீட் = பூஜ்யம்; நீட் தேர்வால் பயனில்லை என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் பூஜ்ஜியமாக குறைப்பதன் மூலம் நீட் தேர்வில்  தகுதி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்பதை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. பயிற்சி மையத்திற்காவும், பணத்திற்காகவுமே நீட் தேர்வு” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்த் நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அவசியம். நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை...

 

நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம். இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை. மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்ச பட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை... அத்தகைய இடங்கள் முழுமையான நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் புரிதல் மிக அவசியம்.... நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை.

 

இதை விமர்சிப்பவர்கள் இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம்...இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்