பந்தயம் கட்டி குளத்தில் குதித்த 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள புனாவாலி காலா கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தம் ராஜ்புத் (45). இவர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று, இவர் குளத்தின் அருகே தனது நண்பர்கள் நான்கு பேருடன் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது நண்பர் ஒருவர் குளத்தில் நீந்தி மற்ற கரைக்கு கடந்தால் ரூ.100 தரப்படும் என்று உத்தம் ராஜ்புத்திடம் பந்தயம் கட்டியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட உத்தம் ராஜ்புத், குளத்தில் குதித்து நீந்த முயன்றார். ஆனால், மதுபோதையில் இருந்ததால், குளத்தின் ஆழத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.
அதனை பார்த்த நண்பர்கள் நான்கு பேர், அவருக்கு உதவுவதற்குப் பதிலாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன் பின்னர் குளத்தின் வழியாக சென்ற சில கிராம மக்கள், உத்தம் ராஜ்புத் குளத்தில் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குளத்தில் இறங்கி அவரை வெளியே இழுத்தனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பந்தயத்தின் ஈடுபட்ட உத்தமின் நண்பர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.