Skip to main content

படங்களை எரித்த இந்து அமைப்பு; பதிலடி கொடுத்த வெளிநாட்டுப் பிரபலங்கள்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

united hindu front

 

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன.

 

இது தொடர்பாக, பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்ளிட்டவர்கள் தெரிவித்தக் கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதே நேரத்தில், பிறநாட்டுப் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு எதிராக, இந்தியப் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சச்சின், விராட் கோலி உள்ளிட்ட சிலர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் கூறிய கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

 

அமெரிக்க வழக்கறிஞரும், அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினருமான மீனா ஹாரிஸ், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் ஐக்கிய இந்து முன்னணி என்ற அமைப்பினர் மீனா ஹாரிஸ், ரிஹானா, நடிகை மியா கலிஃபா, க்ரெட்டா தன்பெர்க் ஆகியோர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை சகித்துக்கொள்ளக் கூடாது என்று கூறி, அவர்களின் படங்களைத் தீயிட்டு கொளுத்தினர்.

 

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீனா ஹாரிஸ், "இந்திய விவசாயிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக பேசினேன். அதற்கான பதிலைப் பாருங்கள்" என தெரிவித்துள்ளார். "என்னை மிரட்ட முடியாது. என்னை அமைதியாக்கவும் முடியாது" என தனது இன்னொரு ட்விட்டில் கூறியுள்ளார். 

 

இதேபோல் மியா கலிஃபா, தனது புகைப்படங்கள் எரிக்கப்பட்டது குறித்து, “நான் உண்மையில் சுயநினைவைப் பெற்றுள்ளேன் என்பதை உறுதிப்படுத்துவது தேவையற்றது என்றாலும், உங்கள் அக்கறைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் விவசாயிகளுடன் நிற்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

க்ரெட்டாவும் "நான் இப்போதும் விவசாயிகளுடன் நிற்கிறேன். அவர்களின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். வெறுப்பு, அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் எதையும் மாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்