எய்ட்ஸ் நோய் இல்லாத ஒரு பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தவறுதலாக கூறியதால் அதிர்ச்சியால் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

சிம்லாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீப காலமாக தனது உடல்நிலை தொடர்ந்து சரியில்லாததால் சோதனை செய்துகொள்வதற்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் சோதனை முடிவின்படி எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த அந்த பெண், மனமுடைந்த நிலையில் திடீரென கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதிக அதிர்ச்சியிலேயே கோமா நிலையில் இருந்த அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவரது எய்ட்ஸ் தொடர்பான சோதனை முடிவுகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எய்ட்ஸ் இல்லை என்றும், தனியார் மருத்துவமனை தவறான தகவலை கூறியதாகவும் தெரியவந்தது. மருத்துவரின் அஜாக்கிரதையால் ஒரு உயிர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மருத்துவமனை மீதும், மருத்துவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.