பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரான ராஜா பட்டேரியா மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸில் முக்கியப் பிரமுகராக அறியப்பட்டவர். இவர் அண்மையில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்கள் எழுந்தன.
அண்மையில் பன்னா மாவட்டத்தில் பவாய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ராஜா பட்டேரியா, “மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மதம், சாதி, மொழியின் பெயரால் மோடி நாட்டை பிளவுபடுத்துவார். மோடியால் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நாம் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள்” எனப் பேசியிருந்தார்.
இது தொடர்பாக அவரை போலீசார் தேடிவந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜா பட்டேரியாவை தாமோ என்ற பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் குறித்து அவதூறாகப் பேசிய ராஜா பட்டேரியாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.