Skip to main content

ஹோட்டல் அறையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்; காதலன் அளித்த பகீர் வாக்குமூலம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Boyfriend's confession on incident of a young woman lying in a hotel room

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் வந்தனா திவேதி (26). இவர் நேற்று, ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வந்தார். இந்நிலையில், அறையை சுத்தம் செய்வதற்காக ஹோட்டல் ஊழியர் ஒருவர், அறைக்குள் வந்து பார்த்த போது அங்கு திவேதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர், ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தார். ஹோட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த திவேதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  அதில், வந்தனா திவேதி தங்கியிருந்த அறை முன்பதிவு விவரங்களில் வந்தனா மற்றும் ரிஷப் நிகாம் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் திவேதியின் அறையை விட்டு ஒரு மர்ம நபர் வெளியேறுவதை கண்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் சோதனைச் சாவடிகளில் உள்ள வாகனங்களை சோதனை செய்து அந்த மர்ம நபரைப் பிடித்ததில் அது ரிஷப் நிகாம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர், அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், வந்தனா திவேதியும், இளைஞர் ரிஷப் நிகாமும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று, இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், இளைஞர் ரிஷப் நிகாம் தான் வைத்திருந்த துப்பாக்கியால், வந்தனா திவேதியின் தலையில் சுட்டு கொலை செய்துள்ளார். 

பின்னர், அங்கிருந்து மும்பைக்கு தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவலுக்காக ரிஷப் நிகாமிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் அறையில், காதலித்த பெண்ணை, இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்