Skip to main content

ராகுலை தொடர்ந்து தேஜஸ்வி; குஜராத்தில் அவதூறு வழக்கு தாக்கல்!

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

bihar deputy cm tejaswi yadav gujarat people related speech case

 

பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீது குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர். எல்ஐசி மற்றும் வங்கிப் பணத்தை மோசடி செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பாஜக ஆட்சியில் சிபிஐ கூண்டுக்கிளி போல உள்ளது" எனப் பேசி இருந்தார்.

 

ஏற்கனவே ஒரு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தேஜஸ்வி யாதவின் இந்த பேச்சுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரேஷ் மேத்தா என்பவர் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

 

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் மோசடிக்காரர்கள் என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக குஜராத் மக்களை அவர் அவமதித்து வருகிறார். துணை முதல்வர் பதவியில் இருப்பவர் இவ்வாறு பேசுவது அழகல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது வரும் மே 1ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் இது தொடர்பாக தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்