Skip to main content

கஞ்சா இளைஞர்கள் செய்த கொடூரம்? - புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் வெளியான ஆடியோ

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Atrocities committed by Ganja youths?-Audio released in Puducherry girl brutality case

புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்படும் அளவிற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால் சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

சிறுமியின் சடலத்தை மீட்டு வெளியே எடுத்து வந்த பொழுது சிறுமியின் உறவினர்களும் பெற்றோர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இதனால் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். ஏற்கெனவே தமிழகத்தில் குழந்தைகள் கடத்த ஒரு கும்பல் வந்துள்ளதாக தகவல் பரவும் நேரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலையின் பின்னணியில் உள்ள கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியை அழைத்துச் சென்றது யார்? எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில், 'கஞ்சா குடிக்கிங்க 7 பேர் சேர்ந்து கை,கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கைபுள்ளப்பா அது' என பேசும் அந்த ஆடியோ பரவி வருகிறது. அந்த ஆடியோ அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்