
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. பலகட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, டெல்லி முதல்வராக பா.ஜ.க சார்பில் ரேகா குப்தா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, கடந்த 20ஆம் தேதி ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார். அவரோடு சேர்த்து, 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
டெல்லியின் 4வது பெண் முதலமைச்சர் என்ற சிறப்பை பெற்ற ரேகா குப்தாவுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற பிறகு, அவரை வரவேற்க ஏராளமான மக்கள் அவரது இல்லத்திற்கு கூடியிருந்தனர். அதில், ரேகா குப்தா பயின்ற கல்லூரி முதல்வர் சவிதா ராயும் அவரை சந்திக்க வந்தார்.
ரேகா குப்தா பயின்ற தெளலத் ராம் கல்லூரியில் பழைய கல்லூரி முதல்வர் சவிதா ராய், மகிழ்ச்சியோடு ரேகா குப்தாவை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதன் பின் கல்லூரி முதல்வர் சவிதா ராய் கூறியதாவது, ‘அவரைப் பற்றிய இனிய நினைவுகள் எனக்கு உண்டு. அவர் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவாற்றுவார். எனது ஆசீர்வாதங்கள் அவருக்கு உண்டு. நாங்கள் அனைவரும் அவருடன் இருக்கிறோம்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
உடனடியாக பக்கத்தில் இருந்த ரேகா குப்தா, “பெருமையாக உணர்கிறேன். டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு, குறிப்பாக தௌலத் ராம் கல்லூரி மாணவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ரேகா குப்தா மட்டுமே முதலமைச்சராகவில்லை; நீங்கள் அனைவரும் முதலமைச்சராகிவிட்டீர்கள்” என்று பேசினார்.