Skip to main content

ஒமிக்கிரான் கரோனா; "தினமும் நிபுணர்களைக் கொண்டு நிலைமையை கண்காணிக்கிறோம்" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

Published on 20/12/2021 | Edited on 21/12/2021

 

union health minister

 

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.

 

இதனிடையே "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும்" என சில தினங்களுக்கு முன்னர் நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்தது.

 

இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியா, ஒமிக்ரான் பரவலை நிபுணர்களைக்கொண்டு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நமது சுகாதாரப் பணியாளர்களின் முயற்சியால் இதுவரை 88 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 58% பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

இன்று அனைத்து மாநிலங்களிலும்,யூனியன் பிரதேசங்களிலும் போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில் 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் அவர்களிடம் உள்ளன. நமது தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இன்று இந்தியா ஒரு மாதத்திற்கு 31 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது. அடுத்த 2 மாதங்களில் இது மாதத்திற்கு 45 கோடி என்ற அளவிற்கு உயரும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விரைவில் தொடங்கும்.

 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 161 ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாங்கள் தினமும் நிபுணர்களைக் கொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறோம். முதலாவது மற்றும் இரண்டாவது கரோனா அலைகளில் நாம் பெற்ற அனுபவத்தின் மூலம், திரிபுகள் பரவும்போது பிரச்சனைகளை சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, முக்கியமான மருந்துகளின் கூடுதல் இருப்பை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Greetings Prime Minister Modi for Infosys founder's wife gets MP post

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும். 

அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பா.ஜ.கவுக்கு ஓட்டு; காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீது அதிரடி நடவடிக்கை

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Congress retained power in himachal pradesh

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்த தேர்தலில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதே சமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களிலும் நேற்று முன்தினம் (27-02-24) மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று முன்தினம் (27-02-24) நடைபெற்றது. அதில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

Congress retained power in himachal pradesh

இதற்கிடையே, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதனையடுத்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் நேற்று (28-02-24) காலை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக நேற்று (28-02-24) சட்டசபை கூடியது. அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் உடனடியாக இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்று, ராஜினாமா செய்வதாக அறிவித்த விக்ரமாதித்ய சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, தனது ராஜினாமா கடிதத்தை, விக்ரமாதித்ய சிங் திரும்பப் பெற்றார். 

Congress retained power in himachal pradesh

இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 6 பேரின் பதவியும் பறிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மொத்தம் 68 இடங்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகுதி நீக்கத்தால் சட்டப்பேரவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையைவிட கூடுதலாக காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதால், தற்போதைய சூழலில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியானது காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.