
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் மற்றொரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை விஷ வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியதால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பேரில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையில் சென்ற பலர் விஷ வாயு பாதிப்பால் மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் விஷ வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.