Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு! சாம் ராஜேஸ்வரனை கைதுசெய்ய தீவிரம் ஏன்? -பகீர் பின்னணி தகவல்கள்!

Published on 23/08/2018 | Edited on 27/08/2018
s

 

துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட குரூப்-1 தேர்வில் நடந்த ஊழல் முறைகேட்டில்… யார் யாருக்கு தொடர்பு உள்ளது என முதல் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன். இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை அதிரடியாக கைது செய்துகொண்டிருக்கும் மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை, அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனையும் கைது செய்ய தீவீரமாகிவருவதால்  முறைகேடாக பதவியை பிடித்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. சாம் ராஜேஸ்வரனை கைது செய்ய மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பின்னணி இதுதான்….    

டி.என்.பி.எஸ்.சி.  குரூப்-1 மெயின் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வரும் திருநங்கையுமான ஸ்வப்னா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செக்‌ஷன் ஆஃபிசர்கள் சிவசங்கர் மற்றும் புகழேந்தி, தேர்வில் பாஸ் பண்ண வைக்க லஞ்சம் கொடுத்த ராம்குமார், அசிஸ்டெண்ட் செக்‌ஷன் ஆஃபிசர் பெருமாள் உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தது ஏ.டி.சி. ஷ்யாமளா தேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டவன் தலைமையிலான மத்தியக்குற்றப்பிரிவு போலீஸ். மேலும், அப்பல்லோ சாம் ராஜேஸ்வரனின் படிப்பு கால நண்பர் என்று நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. செக்‌ஷன் ஆஃபிசர் காசிராம்குமார் 2018 ஏப்ரல்-26 தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டபோதுதான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

 

ஸ்வப்னா

s

 

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை காக்கிகள் நம்மிடம், “2016-ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 62 பேர்  சென்னை தி.நகரைச்சேர்ந்த சாம்ராஜேஸ்வரனின்  அப்பல்லோ ஸ்டடி செண்டரில் தேர்ச்சிபெற்றது எப்படி? என விசாரிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அப்பல்லோ ஸ்டடி செண்டரில் 2018 ஜனவரி-18 ந்தேதி அதிரடி ரெய்டு நடத்தினோம். குரூப்-1 தேர்வு வினாத்தாள்களை தயாரிக்கும் பேராசிரியர்கள் மற்றும் விடைத்தாள் திருத்துபவர்கள், தேர்வாணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்புவைத்துக்கொண்டு தனது பயிற்சி மையத்தில் படிக்கும் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் வினாக்களை முன்கூட்டியே  ‘அவுட்’ செய்திருப்பதும் தேர்வெழுதிய வினாத்தாள்களை மீண்டும் வெளியில் எடுத்து சரியான விடைகளை நிரப்பி தேர்ச்சிபெற்றிருப்பதும் செல்ஃபோன் தொடர்புகள், ரெய்டில் சிக்கிய ஆவணங்கள், காசி ராம்குமாரின் வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரியவந்தது.

 

t2t3t4

 

அதனால், அப்பல்லோ ஸ்டடி செண்டரின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனை கைது செய்து விசாரிக்கத்தயாரானபோது விடுமுறைகால நீதிமன்றத்தில் 8 வாரத்துக்கு கைதுசெய்ய தடையுத்தரவை வாங்கிவிட்டார் சாம் ராஜேஸ்வரன்.  8 வார காலம் முடிந்ததால்  இந்த, முன் ஜாமீனை ரத்துசெய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறோம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருக்கும் இந்த மாபெரும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல் முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் கைது செய்யமுடியாமல் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. சாம் ராஜேஸ்வரனின் பெயிலை கேன்சல் செய்தால்தான், கைது செய்து விசாரித்து மாபெரும் ஊழலை வெளிக்கொண்டு வருவோம். இதன்மூலம், கஷ்டப்பட்டும் படிக்கும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் துணைகலெக்டர், டி.எஸ்.பி., ஏ.டி. பஞ்சாயத்து, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர் பதவிகளுக்கு வரமுடியும்” என்கிறார்கள் உறுதியாக.

காசி ராம்குமார்

kasi

 

சாம் ராஜேஸ்வரனின் பெயிலை கேன்சல் செய்து காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும் என்ற மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் மனுவில், “இந்த முறைகேட்டில் சாம் ராஜேஸ்வரனுக்கு உடந்தையாக இருந்ததாக, கைதுசெய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. செக்‌ஷன் ஆஃபிசர் காசி ராம்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், சில கல்லூரி பேராசிரியர்களும் உடைந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. வழக்கு தொடர்பாக காவ்லதுறை விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். ஆனால், இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட முக்கியப்புள்ளி சாம் ராஜேஸ்வரனுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காவல்துறை விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. மேலும், இந்த குற்றச்சாட்டில் ஈடுட்டதாக கருதப்படும் பேராசிரியர்களையும்  காவல்துறை விசாரணைக்கு செல்ல விடாமல் தடுத்துவருகிறார்.  சாட்சியங்களையும் கலைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதனால், நேர்மையாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் வாழ்க்கையையே சீரழித்துக்கொண்டிருக்கிறார். அப்பேற்பட்ட, சாம் ராஜேஸ்வரனை கைது செய்து விசாரிக்கவில்லை என்றால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முறையாக, விசாரித்தாலே முறைகேடாக தேர்ச்சி பெற்று பதவிகளை பிடித்த பல வி.வி.ஐ.பிக்களின் பிள்ளைகள் சிக்குவார்கள். அதனால், குற்றம்சாட்டப்பட்ட சாம் ராஜேஸ்வரனுக்கு கீழ் நீதிமன்றம் அளித்த பெயிலை ரத்து செய்யவேண்டும் என மனு கொடுத்துள்ளது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.  இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பின் வாதத்தையும் கேட்டு முடிவு செய்யலாம் என உத்தரவிட்ட நீதிபதி தண்டபாணி, வழக்கை ஆகஸ்டு 17 -ந்தேதி ஒத்திவைத்தார். பிறகு, 28-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

 

t5t6t7t8t9

 

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் குற்றம்சாட்ட சாம் ராஜேஸ்வரன் தரப்போ, “காசி ராம்குமாரின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நேர்மையான என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யவில்லை. அதனால்தான்,  8 வாரத்திற்கு என்னை கைது செய்ய தடை கொடுத்தது நீதிமன்றம். என், மீதான குற்றம் கற்பனையானது. 2016 – நடந்த குரூப்-1 தேர்வில் 74 பேரில் 62 பேர் எனது பயிற்சி மையத்தில் வெற்றி பெற்றது என்பது 20 வருட அனுபவத்திற்கு கிடைத்த வெற்றி. சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி கொடுக்கிறேன். இதை, பொறுத்துக்கொள்ளமுடியாத போட்டி பயிற்சி மையத்தினர் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். எனது புகழை கெடுக்கும் விதத்தில் எதிரிகளால் பரப்பப்படும் குற்றச்சாட்டு. காவல்துறை விசாரணைக்கு தயாராக உள்ளேன்” என்கிறது தங்கள் தரப்பு நியாயமாக.    

 

      கூலிவேலை செய்யும் ஏழை தொழிலாளியின் பிள்ளைகள்கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகமுடிகிறது. ஆனால், மிடில் க்ளாஸ்கள் நினைத்தால்கூட தமிழக அரசின் குரூப்-1 பதவிகளை பிடிக்கமுடியவில்லை.   சாம் ராஜேஸ்வரனின் முன்ஜாமீன் மனு கேன்சல் செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில்தான் அதற்கான உண்மையான காரணம் வெளிவரும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசுப் பணிக்கு 394 பேர் தேர்வு’ - டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
394 Candidates Selected for Govt Jobs says tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியல் ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Cancel of the list of candidates for judicial posts High Court

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 12 ஆயிரம் பேருக்கு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நிலை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தி இருந்தது. இதனையடுத்து 2 ஆயிரத்து 544 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிவில் நீதிபதி 245 பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது. மேலும் இந்த பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், “சிவில் நீதிபதி பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு முறையில் குளறுபடி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைப் பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை. இதனால் மற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.