Skip to main content

ஆளும்கட்சியினரால் தடுமாறும் செய்தி மக்கள் தொடர்புத் துறை! -விசும்பும் விருதுநகர் மாவட்டம்!

Published on 24/06/2018 | Edited on 24/06/2018
viruthunagar

 

அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசுத் திட்டங்களின்பால் மக்களிடம் ஈடுபாட்டை உருவாக்கி, அத்திட்டங்களின் பயன்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பணி ஆகும். இத்துறையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரங்கள்) உள்ளிட்ட பல ஊழியர்கள் உள்ளனர். அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்குத்  தகவல் தெரிவித்து,  அரசு வாகனங்களில் அழைத்துச் சென்று அரசுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து,  அதன் முலம் அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது இவர்களின் பணி ஆகும்.  

 

பத்திரிக்கையாளர்களின் பெயரால் ஊழல்!

ஆண்டு தோறும் தமிழக அரசு பத்திரிக்கையாளர்களுக்கு பல ஆயிரம் ருபாய்களை சிற்றுண்டி செலவாக வழங்கி வருகிறது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ( செய்தி) இந்த பணியினை முழுமையாக பார்க்க வேண்டும்.  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரங்கள்) பத்திரிக்கையில் அரசு விளம்பரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் அரசால் வழங்கப்பட்டுள்ள வீடியோ வேனில் அரசின் சாதனை விளக்க படக்காட்சி களை பொதுமக்கள் கூடும் இடங்களில் உடனிருந்து காண்பிக்க வேண்டும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இவர்களின் பணியை  ஒருங்கி்ணைத்து மேற்பார்வை செய்வார். ஆனால் இத்துறையில் பத்திரிக்கையாளர்களின் பெயரைச் சொல்லி பல்வேறு ஊழல்கள் நடைபெறுகிறதே தவிர,  அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. இதற்கு விருதுநகர் மாவட்ட பி ஆர் ஓ அலுவலகம் சரியான உதாரணம். 

 

பணியில் அலட்சியம்!
 

vetri

 

உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டியதில்லை;  வேலை வாய்ப்பு முன்னுரிமையும் தேவையில்லை.  ஒரே ஒரு டிகிரி இருந்தால் போதும்.  முதலமைச்சரே நேரடியாக நியமனம் செய்துவிடுவார். ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் மகன்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இவ்வாறு பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது. காரியாபட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் கரியநேந்தல் ராமமூர்த்தியின் மகன் வெற்றி,  விருதுநகர் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஆவார்.  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின்  வலதுகரம் என்று சொல்லப்படும் ராஜவர்மனின் அக்கா மகன் முத்துக்குமார் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரங்கள்) ஆவார்.  இவர்கள் தங்களது சொந்த மாவட்டத்திலேயை பணியைப் பெற்றுக் கொண்டதால் தங்களது பணியை சரிவர பார்ப்பது இல்லை. அலுவலகத்திற்கு உரிய நேரத்துக்கு வருவதில்லை. அப்படி வராத நேரங்களில்,  அ/ப  - அதாவது அலுவலகப் பணி என்று வருகைப் பதிவேட்டில் எழுதப்படுவது வழக்கம். அதனைஅடித்து திருத்தி கையொப்பம் இடுகின்றனர். மாதம் ஒருமுறை மீட்டிங் ஏற்பாடு செய்து செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய ஏபிஆர்ஓ வெற்றி,  அதனைச் செய்வதில்லை. மேலும் துறைவாரியாக உள்ள அரசுத் திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கான முன்னறிவிப்புகள்,  சாதனைகள்,  அரசு விழாக்கள் குறித்த செய்திகளை முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்குத் தருவதில்லை. தகவல் தெரிந்து வந்தாலும் இருக்கை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளைஅலுவலக உதவியாளர் மூலமாக ஏற்பாடு செய்து தருவதில்லை. 

 

பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்!

பத்திரிக்கையாளர்கள் செய்திகள் குறித்த கூடுதல் விபரங்கள் புள்ளிவிபரங்கள் குறித்து தகவல் கேட்டால் பிரஸ் ரிலீஸ்ஸில் கொடுத்ததை மட்டும் போடுங்க சார் என்று கர்வமாக பதில் சொல்கிறார் ஏபிஆர்ஓ வெற்றி. மேலும் துறைவாரியாக மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்களை காட்டுவதற்கு பத்திரிகையாளர்களை பிரஸ் டூர் அழைத்துச் செல்வதில்லை. மற்றொரு ஏபிஆர்ஓ முத்துக்குமார் கிராமங்களுக்கு வீடியோ காட்சிகள் காட்ட நேரடியாகச் செல்வதில்லை ஓட்டுனர் மற்றும் வாகன ஆப்ரேட்டர் மட்டுமே செல்கின்றனர். ஆனால் தான் சென்றதாகக் கணக்கெழுதி பயணப்படியை எடுத்து கொள்கிறார் முத்துக்குமார்.  அங்கு செல்ல வேண்டிய அவர், அதைச் செய்யாமல்,  அனைத்து அரசு விழாக்களுக்கும் வந்து துறை அதிகாரிகளை மிரட்டுவதோடு மட்டுமல்லாமல்,  பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் பேட்டி எடுக்கும் போது,  அவர்களை கேள்வி கேட்க விடாமல்,   “பேட்டி போதும் நிறுத்துங்கள்” என்று  பத்திரிக்கை யாளர்களை மிரட்டுகிறார். 

 

அரசுப் பணியில் அரசியல்!

pro

 

விருதுநகர் மாவட்ட பிஆர்ஓவாக இருப்பவர் ஜெகவீரபாண்டியன். இவர் அமரராகிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்புவின் மகன் ஆவார். ஏபிஆர்ஓக்களின் நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டு கண்டிக்கும்போது, “நீங்கள் திமுக காரர். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என்று அலட்சியம் செய்துவிட்டு,  அமைச்சரிடம் நாங்கள் பேசி விட்டோம் என்றும்,  பேசிக் கொள்கிறோம் என்றும் பி.ஆர்.ஓ.வை மிரட்டுகிறார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தரும் வாட்ஸ் அப் குரூப்பில் கூட பிஆர்ஓவை அட்மின் கூட ஆக்காமல்,  தாங்களே அட்மினாக இருந்து கொண்டு,  உரிமைகளைக் கோரி பதிவிடும் பத்திரிக்கையாளர்களை குரூப்பை விட்டு நீக்குவது போன்ற ஆணவ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

கண்டுகொள்ளாத கலெக்டர்!

 

collector

 

மாவட்ட ஆட்சியர் சிவஞானமும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் உறவினர்கள் என்பதால் எதையும் கண்டு கொள்வதில்லை அதற்கு உதாரணம் சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி செலவினங்களுக்கு ரூ.2.75 லட்சத்திற்கு முன்னாள் பிஓர்ஓ அருள்பதி கையைழுத்து கேட்க,  கணக்கும் ஆதாரமும் கேட்டு கையெழுத்திட மறுத்தார் கலெக்டர்.  அருள்பதி  மாற்றலாகிச் சென்றதும்,  அதே விழாவிற்கு இந்த இரண்டு ஏபிஆர்ஓக்கள் ரூ. 4.75 லட்சம் என்று அதை விட அதிக தொகை எழுத,  எந்த கேள்வியும் கேட்காமல் கையெழுத்திட்டதுதான் மாஸ்டர் பீஸ். சொந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் உறவினர்களாக இருப்பதால் இவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை என அதிகாரிகளோடு சேர்ந்துகொண்டு விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்களும் புலம்பி வருகின்றனர். 

தற்போது, விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அவலங்கள் குறித்து ஆட்சியர் சிவஞானத்திடம், விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் முறையிட்டிருப்பதால், செய்தித்துறையே செய்திகளில் அடிபடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.