Skip to main content

நிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
mettur power plant

 

 

நிலக்கரி தட்டுப்பாட்டால், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. 


சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு டிவிஷன்கள் உள்ளன. முதல் டிவிஷனில் நான்கு யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.  இரண்டாவது டிவிஷனில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு யூனிட் செயல்பட்டு வருகிறது. 


மேற்சொன்ன ஐந்து யூனிட்டுகள் மூலம் தினமும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். முதல் டிவிஷனின் மூன்றாவது யூனிட்டில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறி, நேற்று முன்தினம் முதல் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. மூன்று நாள்களில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி முடங்கியுள்ளது.


இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இரண்டாவது யூனிட்டில் மின் உற்பத்தி நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 


ஏற்கனவே காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எங்களை விவசாயம் செய்யவிடுங்கள்’ - போராடும் பொதுமக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The public protest against to be set up power plant in mayiladuthurai

சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் பவர் பிளான்ட் அமைக்கப்போவதை கண்டித்து போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பொதுமக்களிடம் வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மெகா கிரைடு வோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பவர் பிளான்ட், தங்களது கிராமத்தில் அமைந்தால் தங்களின் விவசாயமும், வாழ்வாதாரமும் பறிபோகும் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரத்தின் வீரியம் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் நிர்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பவர் பிளான்ட் அமைய உள்ள இடம் முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய இடமாக உள்ளது. மேலும், பவர் பிளாண்ட் அமைப்பது தொடர்பாக கிராமத்திலும், மற்ற எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகு, பவர் பிளான் அனுமதி வழங்கும் பட்சத்தில் இது தொடர்பான நன்மை, தீமைகளை கிராம பொதுமக்களிடம் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கி கூற வேண்டும்” என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

The public protest against to be set up power plant in mayiladuthurai

அதன் பின்னர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பவர் பிளான்ட் அமைப்பது தொடர்பாக அனுமதி பெற வேண்டிய அனைத்து துறைகளிடமிருந்தும் அனுமதி பெற்று, பிறகு கிராம ஊராட்சியில் அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த பின்பு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்டாட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேட்டூர் அருகே இருதரப்பினர் மோதல்; போலீஸ் குவிப்பு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Clash between two sides near Mettur; police presence

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரிபுரம் என்ற பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இஸ்லாமியர்கள் தகன பூமி ஒன்று உள்ளது. இந்த நிலப்பரப்பிற்கு அருகே பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பலர் வசித்து வரும் நிலையில், தங்கள் குடியிருப்பு அருகே உடல்களை அடக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு சடலம் ஒன்று புதைப்பதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில், அதைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அந்த பகுதி மக்கள் உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கேட்டு சாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.