Skip to main content

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தோல்வி அடைவார்: ராகுல் காந்தி பேட்டி

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
rahul-gandhi


 

மாநில கட்சிகள் தங்களின் சொந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டால் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியே தோல்வி அடைவார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சனிக்கிழமை கர்நாடகத்திற்கு வந்தார். 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

கர்நாடகத்தில் பா.ஜனதா என்ன வியூகங்கள் வகுத்தாலும் அந்த கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது. சித்தராமையாவின் ஆட்சி நிர்வாகத்தை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஒரு வாய்ப்பை காங்கிரசுக்கு வழங்குவார்கள். மோடி, ஒரு திறமையற்ற தலைவர் என்பது சமீபத்தில் அவர் எடுத்த முடிவுகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.
 

மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வெறுப்பில் உள்ளனர். தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களும் கூட அதிருப்தியில் இருக்கிறார்கள். மோடி ஆட்சியில் யாரும் திருப்தி அடையவில்லை.

 

Narendra-Modi


 

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் சில தவறுகளை செய்துவிட்டோம். அதனால் தோல்வி அடைய நேர்ந்துவிட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியாக எடுத்துக்கூறவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் இப்போதைய பா.ஜனதா ஆட்சியை மக்கள் ஒப்பிட்டு பார்க்க தொடங்கியுள்ளனர். 
 

மாநில கட்சிகள் தங்களின் சொந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டால் பா.ஜனதா மட்டுமின்றி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியே தோல்வி அடைவார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பப்படி பா.ஜனதா நடந்துகொள்கிறது. மத்திய அரசின் கொள்கைகளில் சங்பரிவார் கொள்கைகளை புகுத்துகிறார்கள்.
 

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார்கள். நான் அவ்வாறு எந்த தலைவரையும் தாக்கி பேசுவது இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் என்பது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே நடைபெறும் கொள்கை யுத்தம்.
 

நாட்டில் காங்கிரஸ், பா.ஜனதாவை தவிர்த்து 3-வது அணி உருவாவது கடினம். மாநில கட்சிகள் ஒரு தலைவரை மையமாக கொண்டு செயல்படுகின்றன. அந்த கட்சிகள் கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவது இல்லை. அதனால் 3-வது அணி உருவாகாது. காங்கிரசுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு அணி அமைத்து செயல்பட்டால் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜனதா 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Central Minister Anurag Thakur  says BJP is seeing a lot of growth in Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் வலுவான தலைமையை விரும்புகிறார்கள், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் தலைமையில் நாடு எப்படி முன்னேறி உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. இப்போது, ​​மக்கள் அதன் தொடர்ச்சியை காண விரும்புகிறார்கள். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் மாற்றத்தின் கடலைப் பார்க்க முடிந்தது. பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வை மக்கள் நம்பிக்கை கதிராகப் பார்க்கிறார்கள். இந்த முறை தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளைப் பெறப் போகிறது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார். 

Next Story

வாக்கு சதவீதம் சரிவு; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Radhakrishnan explained decline in voter turnout

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை  நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. மேலும் வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2019 மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.