![information Released about When Mudhalvar Marunthagam opening](http://image.nakkheeran.in/cdn/farfuture/KNgx0RWmSS7aYHg06ipLe_dG_vgcg7rYBWERZ9zFxq8/1739336499/sites/default/files/inline-images/muthalvar-pharmachy-art.jpg)
கடந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு, பொதுப் பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தப்படும்.
2025 ஆண்டின் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல்வர் மருந்தகங்களைத் தொடங்கி வைக்கிறார். சென்னையில் தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை மற்றும் கொளத்தூர் உள்ளிட்ட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.