Skip to main content

வருமானவரித் துறைக்கு எதிரான வழக்கு! கார்த்தி சிதம்பரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

Karti Chidambaram


காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது வருமானத்தை மறைத்ததாக  வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் தாக்கல் செய்திருந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 
 

சென்னை முட்டுக்காட்டிலுள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கடந்த 2015 ஆம் ஆண்டு 'அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்துக்கு கார்த்தியும் அவரது குடும்பத்தினரும் விற்பனை செய்தனர். 
 

இதன்  மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரிக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018- இல் வழக்குத் தொடர்ந்தது.  
 

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 2019- இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அவர் மீதான வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 


இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தியிம் அவரது மனைவியும் வழக்குத் தொடர்ந்தனர். 
 

இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர். விசாரணையின் போது, ''மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, மாஜிஸ்திரேட் வழக்கை மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குத்தான்   மாற்ற வேண்டும். அதற்குமாறாக, செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது. குற்றச்சாட்டு கூறப்பட்ட ஆண்டுகளில், வருமான வரி மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடுகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை வருமானவரித்துறை பதிவு செய்ததே தவறானது'' என்று கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை எதிர்த்து வாதிட்ட வருமான வரித்துறை வழக்கறிஞர்கள், " இவர்களின் வருமானவரி  கணக்குகளின் மதிப்பீடு முடிந்தாலும், அதை மறுமதிப்பீடு செய்யத் வருமானவரித் துறைக்கு அதிகாரம் உள்ளது. வழக்கு மாற்றப்பட்டதில் சட்டவிதிகள் மீறப்படவில்லை. அதனால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்களது மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் " என வாதிட்டனர். 
 

இதனையடுத்து வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார் நீதிபதி சுந்தர். 

இந்த நிலையில், வருமானவரித் துறைக்கு எதிராக கார்த்தியும் அவரது மனைவியும் தொடர்ந்திருந்த அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தர், வருமான வரித்துறை வாதங்களை ஏற்று கார்த்தி சிதம்பரம் தரப்பின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு ப.சிதம்பரம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்