Skip to main content

கல்விக்கடனை வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது! ராமதாஸ்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018


 

படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். படித்து முடித்த மாணவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை கடன் தவனையாக வசூலிக்கும் வகையில் கல்விக் கடன்கள் சீரமைக்கப்பட வேண்டும். அது தான் சாத்தியமான, யதார்த்தமான ஏற்பாடாக அமையும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது  மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கல்விக்கடனை வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை மிரட்டி வசூலிக்கும் பணியை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளன. வங்கிகளின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் ரூ.65,000 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 30&35% கடன்களை, அதாவது சுமார் ரூ.20,000 கோடியை தமிழகத்தைச் சேர்ந்த 10  லட்சம் மாணவர்கள் வாங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட கல்விக் கடனில், 3.66 லட்சம் மாணவர்கள் வாங்கிய ரூ.6364 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.1565 கோடி வாராக்கடனில் ரூ.915 கோடி வாராக்கடன் தனியார் கடன் வசூல் நிறுவனங்களிடம் விற்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்தியன் வங்கிக்கு சொந்தமான ரூ.76.49 கோடி வாராக் கடனும், பேங்க் ஆப் இந்தியாவின் ரூ.38.66 கோடி வாராக்கடனும் தனியார் கடன் வசூல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ள கடனில் பெரும்பாலானவை தமிழகம், கேரளத்தை சேர்ந்தவையாகும்.
 

பொதுத்துறை நிறுவனங்களின் இந்த செயல் பொறுப்பற்றதும், மனிதாபிமானமற்றதும் ஆகும். கல்விக் கடனைப் பொறுத்தவரை வாராக் கடன் என்பது பெரிய குற்றமல்ல; இன்னும் கேட்டால் அது தவிர்க்க முடியாதது ஆகும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் வேலை கிடைத்த உடனோ அல்லது படிப்பை முடித்த ஓராண்டிலேயோ கல்விக் கடன் தொகையை செலுத்தத் தொடங்க வேண்டும். இந்த கெடுவைத் தாண்டி  3 மாதங்கள்  கடன் தவணை செலுத்தப்படவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இன்றுள்ள சூழலில் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படித்த மாணவர்களில் பெரும்பான்மையினருக்கு 10 ஆண்டுகள் கழித்து கூட தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. அவர்களால் கல்விக் கடனை செலுத்த முடியாததற்கு இதுவே காரணமாகும்.

 

Ramadhoss


 

படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். படித்து முடித்த மாணவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை கடன் தவனையாக வசூலிக்கும் வகையில் கல்விக் கடன்கள் சீரமைக்கப்பட வேண்டும். அது தான் சாத்தியமான, யதார்த்தமான ஏற்பாடாக அமையும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது  மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கடன் வசூல் நிறுவனங்களிடம் கல்விக் கடன்களை விற்பனை செய்வது என்பதே சட்டவிரோதமானது ஆகும். இந்த முறையில் ஒரு வங்கியிடம் ரூ.1000 கோடி கல்விக்கடன் இருந்தால், அதை தனியார் நிறுவனங்கள் ரூ.400 முதல் ரூ.450 கோடிக்கு வாங்கிக் கொள்ளும். அந்தப் பணத்தை தனியார் நிறுவனங்கள் உடனடியாக செலுத்தாது. மாணவர்களிடம் பணத்தை வட்டியும், முதலுமாக வசூலித்து தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள பணத்தை தான் வங்கியில் செலுத்தும். அதிலும் கூட ஒரு பகுதி கடைசியில் தள்ளுபடி செய்யப்படக் கூடும்.
 

அதேநேரத்தில் வாராக் கடனை வசூலிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் சாம,பேத, தான, தண்ட முறைகளை தனியார் நிறுவனங்கள் கையாளும். தினமும் தொலைபேசியில் மாணவர்களை தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் மிரட்டலாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசும். வேலை கிடைக்காததால் ஏற்கனவே குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் தினமும் அவமரியாதைகளை எதிர்கொண்டு வரும் மாணவர்கள், இப்போது கல்விக் கடனுக்காக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் மரியாதைக் குறைவான நெருக்கடிகளால் அவமானமடைந்து தவறான முடிவுகளை எடுக்கக்கூடும். மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் கல்விக் கடன் வாங்கியிருந்த லெனின் என்ற மாணவரின் கல்விச் சான்றிதழ்களை பறித்துச் சென்ற தனியார் நிறுவனம், தொடர்ந்து மிரட்டலும் விடுத்து வந்ததால் கடந்த 2016-ஆம் ஆண்டு   ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் இப்போது வாராக்கடன்களை தனியாருக்கு விற்பனை செய்திருப்பதால் இத்தகைய தற்கொலைகள் அதிகரிக்கும்.
 

கடந்த காலங்களில் கேரள மாணவர்களின் கல்விக் கடன்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட போது அம்மாநில அரசு தலையிட்டு, அந்த முடிவை திரும்பப் பெறச் செய்தது. ஆனால், தமிழக அரசு  இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் நலன்களை காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, தமிழக அரசும் வங்கி நிர்வாகங்களிடம் பேசி தமிழக மாணவர்களின் கடன்கள் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.
 

இதெற்கெல்லாம் மேலாக 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையின் 39&ஆவது பக்கத்தில்,‘‘வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையின்றி உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே செலுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை நாளைய நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? ராமதாஸ் கண்டனம்

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
Ramadoss



மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான, மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். 
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் கடந்த 2008ஆம் ஆண்டு முறையான தேர்வுகளின் மூலம் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்களது பணியில் எந்த குறையும் காணப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை பணிநிலைப்புச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ள காரணம் அபத்தமானது மட்டுமின்றி, ஏற்க முடியாததும் ஆகும்.
 

தகுதியற்ற ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தக்கூடாது என்று கடந்த 2006ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காரணம் காட்டியும், 42 பணியாளர்களும் தகுதியில்லாமல் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று கூறியும் அவர்களைப் பல்கலைக் கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு, கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை எந்த குறையும் இல்லாமல் செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முறையான கல்வித் தகுதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பாஸ்கரன், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரையிலான இரண்டரை ஆண்டுகளில் இவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது, திடீரென அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி பணிநீக்கம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
 

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேரின் பணி நீக்கத்திற்காக நிர்வாகம் கூறியுள்ள காரணங்கள்  எதுவும் உண்மையல்ல. மாறாக அவர்களுக்கு பதில் புதிய பணியாளர்களை நியமித்தால் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் என்ற துணைவேந்தரின் துடிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் வரும் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி, ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் 8 பேராசிரியர்கள், 16 இணைப் பேராசிரியர்கள், 22 உதவிப் பேராசிரியர்கள் என 46 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அடுத்தக்கட்டமாக 63 இளநிலை உதவியாளர்களை நியமிக்கும் நோக்குடன் தான் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ஆம் ஆண்டு பாஸ்கரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரப்படுத்தி, 2016 நவம்பர் மாதத்தில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்காக மட்டும் ரூ.22 கோடி கையூட்டு வசூலிக்கப்பட்டதாகவும். இப்போதும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்ய பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 

பொதுவாக துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாக பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பது மரபு ஆகும். ஆனால், இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெறவுள்ள பாஸ்கரன் புதிய நியமனங்களை மேற்கொள்வதும் அதற்கு வசதியாக தற்காலிக பணியாளர்களை நீக்குவதும் சட்டவிரோதமானவை. பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிப்பது தான் தமது நோக்கம் என்று கூறி வரும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இந்த விஷயத்தில் தலையிட்டு, தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்களை பணி நிலைப்பு செய்து, அதன்பின்  மீதமுள்ள இடங்களை மட்டும் நேர்மையான முறையில் நிரப்ப ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

Next Story

சென்னை புதிய விமான நிலையம் வருமா... வராதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
New airport



சென்னை புதிய விமான நிலையம் வருமா? வராதா? என தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். புதிய விமான நிலையம் அமைப்பது சென்னையின் உடனடித் தேவை எனும் நிலையில் முதலமைச்சரும், விமான நிலைய அதிகாரிகளும் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
 

சென்னை விமான நிலையம் பயணியர் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில் அதன்  முழுத் திறனையும் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்பதால் அதற்குள்ளாக புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது அவசியமாவதாகவும், அதற்குள் சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருந்தார். 
 

ஆனால், அதற்கு இரு நாட்கள் முன்பாக கடந்த 28-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை என்பதால் தான் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். புதிய விமான நிலையம் அமைக்கப்படாததால் அதிகரிக்கும் பயணியர் நெரிசலை சமாளிப்பதற்காகத் தான் மீனம்பாக்கம் விமான  நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளதாகவும் சந்திரமவுலி தெரிவித்தார்.

 

ramadoss


 

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை; அதனால் தான் புதிய விமான நிலையம் கைவிடப்பட்டு விட்டது என்று விமான நிலைய இயக்குனர் கூறுகிறார். ஆனால், 2024-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறுகிறார். இந்த இருவரில் யாருடைய கூற்றை நம்புவது? என்பதில் தான் குழப்பம் நிலவுகிறது,


திருப்பெரும்புதூரில் புதிய விமானநிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது உண்மை. ஆனால், பல ஆண்டுகளாகியும் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசால் கையகப்படுத்தித் தர முடியவில்லை. ஒரு கட்டத்தில் கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர் ஆகிய 4 பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது திடீரென புதிய விமான நிலையம் அமைக்கப்படாது என்று மத்திய அரசு கூறினால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
 

இந்தியாவில் சாதாரண நகரங்களில் கூட இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது.  ஆனால், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் இன்னும் புதிய விமான நிலையம் அமைக்கப் படவில்லை. சென்னைக்கு வந்து செல்லும் பயணியர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  சென்னையில் புதிய விமான நிலையம் கண்டிப்பாகத் தேவை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையத்திற்காக 7 கி.மீ. நீளத்திற்கும், 4 கி.மீ. அகலத்திற்கும் பறந்து விரிந்து கிடக்கும் 7,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திருப்பெரும்புதூரை விட சிறந்த இடம்  இல்லை என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கூறி விட்ட பிறகும் அங்குள்ள இடத்தை கையகப்படுத்திக் கொடுக்காதது ஏன்? என்பதை மாநில ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
 

ஒருவேளை திருப்பெரும்புதூரில் நிலம் கையகப்படுத்த முடியவில்லை என்றால் உத்திரமேரூர், மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி ஆகியவற்றில் எங்காவது விமான நிலையம் அமைக்கலாம் எனும் சூழலில், சென்னையில்  புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுவது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இது இப்படியென்றால், 2024&ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று எந்த அடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என விளக்கம் வேண்டும்.
 

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசர, அவசியத் தேவை ஆகும். அதில் குழப்பங்கள் நிலவும் நிலையில், புதிய விமானம் வருமா.... வராதா? என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். புதிய விமான நிலையம் வருகிறது என்றால் அது எங்கு அமையும்? அதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு விட்டதா? அப்படியானால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கி எப்போது நிறைவடையும்? என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.