Skip to main content

மேயர் தேர்தலில் குளறுபடி? - தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
The court refused to ban for Chandigarh Mayoral Election result

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று (30-01-24) நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார். 

நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குல்தீப் குமார் மனுத் தாக்கல் செய்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘சண்டிகர் மேயர் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளது. அதனால், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். மேலும், தற்போதைய தேர்தல் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

The court refused to ban for Chandigarh Mayoral Election result

அந்த மனு மீதான விசாரணை இன்று (31-01-24) பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, குல்தீப் குமார் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க சண்டிகர் நிர்வாகம் மற்றும் சண்டிகர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தற்போதைய தேர்தல் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குல்தீப் குமார் கோரிக்கையை நிராகரித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்