Skip to main content

தொடரும் தோல்விகள்..! எங்கே போனது மோடி அலை?

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

இடைத்தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரேயொரு ஆண்டு மட்டுமே இருக்கும் சூழலில், பா.ஜ.க.வின் இந்தப் பின்னடைவு 2014ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட மோடி அலை எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
 

Modi

 

மோடி பிரதமராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்தடுத்த தோல்விகளின் மூலம் பா.ஜ.க. மக்களவையில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. மொத்தம் 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை வெறும் 273 மட்டுமே. இந்நிலையில், இந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மற்றும் அவற்றில் பா.ஜ.க.வின் நிலை குறித்து பார்க்கலாம். 
 

2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 27 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் பா.ஜ.க. தான் போட்டியிட்ட 24 தொகுதிகளில், வெறும் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தன் கைவசம் இருந்த 13 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழந்திருக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட இதுவரை கைப்பற்ற முடியவில்லை. 
 

Modi

 

மேலும், பா.ஜ.க.வுக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் மோசமான தேர்தல் முடிவுகளையே தந்திருக்கிறது. அதாவது, இதுவரை பா.ஜ.க. தான் இழந்த 8 தொகுதிகளில் கோரக்பூர், புல்பூர், அஜ்மீர், ஆல்வார், கைரானா மற்றும் பந்த்ரா கோண்டியா ஆகியவற்றை இழந்தது இந்த ஆண்டில்தான். ஆனால், காங்கிரஸோ பா.ஜ.க.விடம் இருந்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றன. 
 

ஆந்திராவில் கூட்டணிப் பிளவு, கர்நாடகாவில் தோல்வி என தென்னிந்திய நம்பிக்கை தகர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாநிலங்களிலும் தோல்வியை எதிர்கொண்டு வருகிறது பா.ஜ.க. இடைத்தேர்தல் தோல்வி என்பது பா.ஜ.க.வின் வியூகம் என்று சொல்வீர்களானால், பெரும்பான்மை இழப்பின் மூலம் சொந்த பிம்பம் நொறுக்கப்படுவதை அது விரும்புமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்தானே. இன்னும் ஒரே ஆண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பா.ஜ.க.வை எதிர்க்கின்றன. இப்போதே மோடி அலை தொலைந்துவிட்டதா? என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு அதற்கான விடை கிடைத்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.