Skip to main content

சாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு! நக்கீரன் 'EXCLUSIVE'...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sathankulam

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம் அவர்களது உடலை உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த உடற்கூறாய்வில் என்ன நடந்தது. அவர்களது உடலில் எப்படிப்பட்ட காயங்கள் இருந்தன. அவர்களது மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற தகவல்கள் நக்கீரனுக்கு Exclusive-வாக உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களின் வட்டாரத்தில் இருந்து கிடைத்தது.

 

உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் உடற்கூறாய்வில் தடய அறிவியல் துறை பேராசிரியர், அதே துறையைச் சார்ந்த இணை பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர், உதவி பேராசிரியர் என இருவர் மட்டுமே இருந்தனர். இணை பேராசிரியர், ஒரு பெண் மருத்துவர். அவர் கடைசி நேரத்தில் உடற்கூறாய்வு செய்யும் குழுவில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மதுரை மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இருந்து தடய அறிவியல் துறை இணை பேராசிரியர் ஒருவரை இடம் பெற வைத்திருக்கலாம். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்கும் ஒரு மாணவரை வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ எடுக்கப்பட்ட உடற்கூறாய்வில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மரணங்களை உடற்கூறாய்வு செய்யும்போது பின் பற்றவேண்டிய டிஜிட்டல் அட்டாப்சி எனப்படும் நவீன உடற்கூறாய்வு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இறந்தவரது சடலத்தை சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தினால் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் தெளிவாகத் தெரியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முறையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியும். அவர் எதனால் இறந்தார் எனத் தெளிவாக தெரிந்துவிடும். அந்தப் பதிவுகள் எலக்ட்ரானிக் முறையில் அழிக்கப்பட முடியாத வகையில் இருக்கும்.

 

இங்கிலாந்தில் சமீபத்தில் சந்தேகப்படக்கூடிய விதத்தில் நடந்த மரணங்களை 'டிஜிட்டல் அட்டாப்சி' முறையில் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அதில் மரணத்திற்கான காரணம், மரணம் அடைந்தபோது இருந்த உடல்நிலை ஆகியவை மிகத் தெளிவாக தெரிந்தது. அந்த முறையில் இந்த இருவரது உடற்கூறாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

 

பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் உடற்கூறாய்வின் அடிப்படையில் இருவரது மரணத்திற்கான காரணம் (Homicide due to prolonged physical and psychological torture) நீண்ட நேரம் உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மூலமாக மரணம் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தங்களது ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்களது பின்தொடை மற்றும் ஆசன வாயிலுக்கு அருகே உள்ள பகுதி மற்றும் ஆசன வாயில் பல இடங்களில் சதை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.(Multiple contusions all over the gluteal and rectum region and in the upper and middle part of thigh). rectum எனப்படும் குடலின் கடைசிப் பகுதியான 12 செ.மீ. நீளமுள்ள மலக்குடல் எனப்படும் ஆசனவாய் வழியாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. (rectal bleeding) இதனால் அவர்களுக்கு ரத்தக் கசிவு அதிர்ச்சி (Haemorrhagic shock) ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தக் கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர்களது ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. இதனால் இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என அந்த அறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


இதுபற்றி நம்மிடம் பேசிய உடற்கூறாய்வு மருத்துவ நிபுணர் ஒருவர், "அவர்களது விதைப்பை, ஆணுறுப்பு (scrotum, penis) ஆகிய பகுதிகளில் காயங்கள் இல்லை. அவர்களது வயிறு மற்றும் மார்பு கூட்டிற்குள் (abdomen, thorax) எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தக் காயமும் இல்லை. மரணத்திற்கான காரணம் அவரது இடுப்புப் பகுதியில் இருந்த ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட ரத்தப்போக்குதான்'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

நாம் இதுபற்றி கருத்தறிய புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கருணாநிதியிடம் கேட்டோம். "இந்த ரிப்போர்ட்டின்படி மரணம் நிகழ்ந்திருக்குமானால் இது கொடுமையான, சித்ரவதையினால் ஏற்பட்ட மரணம். இதைச் செய்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் இதில் உண்மைகள் வரும் என்றார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் சுப்ரீம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்'' என்றார்.

 

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என எடப்பாடி அறிவித்திருப்பதில், டாக்டர் கருணாநிதி போன்றவர்களின் நியாயக் குரலும் அடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.