Skip to main content

“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..!” “நான் என்ன ஏமாளியா?” ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
admk

 

 

எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமை கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.

 

admk

 

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடியும் பன்னீரும் தனித்தனியாக அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்தபோது, நிரந்தர முதல்வரே வருக என எடப்பாடி ஆதரவாளர்களும், வருங்கால முதல்வரே என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டு கோஷ்டி பூசலை அம்பலப்படுத்தினர். அதற்கேற்ப உள்ளேயும் நாகரீகமான முறையில் பூசல் வெடித்தது. 28-ந் தேதி கூடும் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்ட இரு தரப்பும் முஷ்டியை உயர்த்துவதால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு திடீர் மவுசு கூடியுள்ளது.

 

admk

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடக்கும் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஓப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்குவது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமிதான், இம்முறையும் அவரேதான்.

 

‘எனக்கு பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. இருக்கும் என அம்மா(ஜெ.) சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், கட்சியில் சமீபகாலமாக எதிரொலிக்கும் பிரச்சனைகள் ரசிக்கும்படியாக இல்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நீங்கள் ரெண்டு பேருமே (இபிஎஸ், ஓபிஎஸ்.) அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் தி.மு.கவையும் துரோகிகளையும்(தினகரன்) வீழ்த்துவதற்கு பயன்தரும்’’ என்றிருக்கிறார்.

 

admk

 

இதனையடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், "முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்வடைந்திருக்கிறார்கள். தொண்டர்கள் சோர்வடைந்தால் அது கட்சியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி நல்லா இருந்தாதான் ஆட்சியை நாம் மீண்டும் பிடிக்க முடியும். ஆட்சியில் நாம் இருக்கிறோம். ஆனா, இதன் நன்மைகள் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லைங்கிற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் சரி பண்ணுங்கள்'' என்றார்.

 

admk

 

ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகரன், "அம்மாவின் ஆன்மா உண்மையில் ஓ.பி.எஸ்.ஸிடம்தான் இருக்கிறது. அவரது மனதை காயப்படுத்துபோல பல நிகழ்வுகள் நடக்கிறது. அவர் மனம் வருந்தினால் கட்சிக்கு நல்லதில்லை'' என்று முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் எடப்பாடியும் அவருக்கு ஆதரவு அமைச்சர்களும் நடந்து கொள்வதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் பேசிக் கொண்டேயிருக்க, அமைச்சர் உதயக்குமார் சட்டென்று குறுக்கிட்டு, பேச்சின் திசையை மாற்றினார்.

 

 

admk

 

"தேர்தலை எதிர்கொள்ள எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தலைமை அவசியம். அந்த தலைமை உருவானால்தான் ஆட்சியை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்கு முன்பு சின்னம்மா (சசிகலா) விடுதலையாகும்போது அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தால் நமக்கு வெற்றி நிச்சயம்'' என்று உதயக்குமார் சொல்ல, அதனை அமைச்சர் செல்லூர் ராஜு வழிமொழிய, கூட்டத்தில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

 

admk

 

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா எதிர்ப்பு நிலையை துவக்கத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறோம். இப்போ திடீர்னு அவரை மையப்படுத்திப் பேசினால் எப்படி? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை விலக்கி வைத்துவிட்டு, கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற கட்டமைப்புக்குள் நாம் இயங்கிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அவரை உள்ளே நுழைப்பது வீண் பேச்சு. கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்மந்த மில்லைன்னு எல்லோரும் சேர்ந்துதானே முடிவு செய்தோம். இப்போ, அதற்கு மாறாக பேசினால் என்னன்னு நினைக்கிறது? சசிகலா விஷயத்தில் கட்சியில் எடுத்த முடிவுப்படி இத்தனை நாள் பேசிய நான் என்ன ஏமாளியா?''’என்று கோபம் காட்டியிருக்கிறார்.

 

admk

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசிய அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும், "தேவையற்ற பேச்சுகள் இங்கு தேவையில்லை. இந்த தேர்தல் நமக்கு சவாலான தேர்தல். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தலில் நமக்கான வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற அந்தச் சூழலில், சில முடிவுகளை தீர்மானித்திருந்தோம். ஆனால், இன்றைய சூழல்களுக்கு அது தேவையில்லை. அதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லிவிட்டு தேர்தலை சந்திக்கலாம். ஒற்றுமையாக, ஒரு மனதாக விவாதிப்போம்’ என்று சொல்ல, முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கு சரிப்பட்டு வராது. தேர்தலுக்கு பிறகுதான் அதனை முடிவு செய்ய வேண்டும்'' என்று வைத்தியலிங்கம் சொல்லவும் சலசலப்புகள் உருவானது.

 

admk

 

சட்டென்று எழுந்த அமைச்சர் சி.வி. சண்முகம், "முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவான கட்சியாக அ.தி.மு.க.வை விமர்சிப்பார்கள். ஏற்கனவே, இப்படி ஒரு முத்திரை நம் கட்சிக்கு இருந்துச்சு. மீண்டும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வரக்கூடாது. இப்போதுகூட, ஆட்சியில் கிடைக்கும் எல்லா நல்லவைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கே கிடைக்கிற நிலை இருக்கிறது‘’ என்று எடப்பாடியின் சமூகத்தை மனதில் வைத்துப் பேச, எதிர்ப்பு கிளம்பியது. ஆதாரத்துடன் பேசுவதாகவும், கோபத்தை கிளறி, உண்மையைப் போட்டு உடைக்க வைத்துவிடாதீர்கள்'' எனக் காட்டம் காட்டியிருக்கிறார் சண்முகம்.

 

சலசலப்புகள் அடங்கியது. மீண்டும் பேசிய அவர், குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சிங்கிற விமர்சனம் நமக்கு நல்லதல்ல. முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டுத்தான் தேர்தலை சந்திக்கணும்னு மக்களோ தொண்டர்களோ கேட்கலை. அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும்ங்கிறது நம் கட்சியின் பலம். இதில் குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்துவது தேவையில்லாதது'' என்றார் ஆவேசமாக.

 

எல்லாவற்றையும் எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வந்த நேரத்தில், எழுந்த ஓபிஎஸ், "அதிகாரத்துக்கு அடித்து கொள்வது நம் கட்சியில் யாருக்கும் இல்லாத பழக்கம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையாக இருந்து நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் சகோதரர் பழனிசாமியிடம் சொல்லி வருகிறேன். அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆட்சியும் கட்சியும் வலிமையாக இருக்க எந்த தியாகம் செய்யவும் நான் தயார். என்னை சந்திப்பவர்களிடமும் இதைத்தான் சொல்லி வருகிறேன்.

 

admk

 

நாம் தீர்மானித்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைப்பதுதான் ரொம்ப முக்கியம். இதனை அமைப்பதில் நாம் ஏன் சுணக்கம் காட்ட வேண்டும்? கட்சிக்குள் முரண்பாடுகள் வந்தால் அதனை சரி செய்ய வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்ங்கிற யோசனை சொன்னவர் நீங்கள்தான். இப்போ, அதற்கு எதிராக இருக்கிறீர்கள். வழிகாட்டும் குழுவை அமைத்து அதன் வழியாக தேர்தலை சந்திப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார் ஒரே போடாக.

 

இதனை ஏற்க மறுத்த எடப்பாடி, "கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம். இதுதவிர, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளோடு விவாதித்துத்தான் எடுக்கிறோம். அப்படியிருக்க புதிதாக ஒரு குழு எதற்கு? தேவையற்ற மனக்கசப்புகளும் குழப்பங்களும்தான் வரும். 11 பேர் எனில் அனைத்து சமூகத்தினரையும் இதில் திருப்திப்படுத்திட முடியுமா? வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா? அதனால் வழி காட்டும் குழுங்கிறது தேவையில்லாதது” என்று சொல்ல, கொங்கு அமைச்சர்களும், எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்கும் மற்ற அமைச்சர்கள் சிலரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

 

இதனையடுத்து, செயற்குழு-பொதுக்குழுவினை கூட்டி இறுதி முடிவை எடுக்கலாம் என கே.பி.முனுசாமி சொல்ல, அதனையடுத்து வருகிற 28-ந்தேதி செயற்குழுவை கூட்டுவது என முடி வெடுத்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அறிவிப்பு செய்தனர். கூட்டமும் முடிவுக்கு வந்தது.

 

கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவு அமைச்சர்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, "அனைத்து அமைச்சர்களையும் சுதந்திரமாக இயங்க அனுமதித்தும் என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? என்னை விட்டு விடுங்கள். யார் தலைமையில் வேண்டுமானாலும் தேர்தலை சந்தியுங்கள். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வது நான். ஆனா, எனக்கு எதிராகத்தான் இருப்பார்களெனில், நானும் தடலாடி அரசியல் செய்துதான் ஆக வேண்டுமா?'' என்று வெடித்திருக்கிறார் எடப்பாடி. அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் சமூக அமைச்சர்களை தவிர்த்து மற்ற சமூகத்தின் அமைச்சர்கள், மா.செக்கள் அனைவரையும் தன் தலைமையில் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஏற்கனவே, இது குறித்து ஒரு ரவுண்ட் பேசி முடித்துள்ள ஓபிஎஸ், தற்போதைய ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் அவர்களிடம் விவாதித்துள்ளார். 28-ந்தேதிகூடும் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியும், அதனை தடுக்கும் வியூகத்தில் ஓபிஎஸ்சும் தத்தம் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். செயற்குழுவில் தனக்கான ஆதரவு குரல்களே அதிகம் எதிரொலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் எடப்பாடி, அதற்காக என்ன விலை கொடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறார்.

 

admk

 

அதனை முறியடிக்க, ஜூனியர் அமைச்சர்கள், மா.செ.க்கள், ஒ.செ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு, "எடப்பாடியின் ஹிட் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள்; உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை; அவரையா நீங்கள் ஆதரிக்க போகிறீர்கள்?'' என எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் பேசி வருகின்றனர். செயற்குழுவில் வலிமைகாட்ட ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வியூகம் அமைப்பதால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்தபடி இருப்பதால் வெல்லப்போவது யார்? என்கிற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது.

 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.