Skip to main content

மீம்ஸ் போடும் பொடி பசங்களா, உங்களுக்கு தெரியுமா.....

Published on 16/04/2018 | Edited on 16/04/2018

கேப்டன் விஜயகாந்த், சினிமாத்துறையில் தனது 40 ஆவது ஆண்டை இந்த வருடம் அடியெடுத்து வைக்கிறார். அதற்காக அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விஜயகாந்துக்கும் அவர்களுக்குமான தொடர்பும், அவரது அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர். அவ்வாறு பேசியவர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் உரை,
 

sathyaraj


"என் அன்பு நண்பர், புரட்சிக் கலைஞர், தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அவர்களே, அவர்களின் உள்ளங்களே".  நான் எப்பொழுதும் என் நண்பனை பற்றி பேசும்போது சொல்வேன் திரையுலகில் அள்ளிக்கொடுத்தவர் எம்ஜிஆர், அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த் என்று. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த ஒரு  மூலையில்,  யாருக்கு கஷ்டம் என்றாலும் முதல் நன்கொடை இவருடையதாகத்தான் இருக்கும். ஆனால், அதில் என்ன பிரச்சனை என்னவென்றால் இவர் எக்கச்சக்கமா தூக்கி கொடுத்துவிடுவார். எங்களுக்கு எல்லாம் அது பெரிய சிரமமாகப் போய்விடும். அவர் அந்த காலத்திலேயே பத்து லட்சம் என்பதை சாதாரணமாக தூக்கி கொடுப்பவர். தற்போது அந்தத் தொகையெல்லாம் ஒரு கோடி வரை இருக்கும். அவர் அத்தனை செய்கிறார் என்பதால்தான் நாங்களும் ஓரளவுக்காவது செய்ய முன் வருவோம். இவ்வளவு செய்தும் தளராது இருக்கிறார் என்றால் அதற்கு காரணம், சகோதரி பிரேமலதாதான். நம் வீட்டில் யாராவது உதவி செய்ய முன் வருகிறோம் என்றால், அதை முதலில் வேண்டாம் என்று தடுப்பது மனைவியாகதான் இருக்கும். ஆனால், சகோதரியோ அள்ளி கொடுங்கள் என்ற மனதைக் கொண்டவர். அப்படிப்பட்ட பலம் விஜயகாந்துக்கு அமைந்திருக்கும் என்றால் அது அவரது மனைவியாக தான் இருக்க வேண்டும்,
 

எதுவாக இருந்தாலும் சரி, ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் பெரியார் திடலில் நாடகம் ஒன்றில் நடித்துக்கொடுத்து பெரும் வசூலை செய்து கொடுத்தார். அந்த நாடகத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். ஈழப்போருக்காக கலையுலகத்தில் இருந்து முதன்முதலில் சம்பாரித்துக்கொடுத்தவர் என் நண்பன் விஜயகாந்த்தான். நடித்ததில் மட்டுமல்ல, தன் பையனுக்கு பிரபாகரன் என்று பெயரும் சூட்டினார் அதுதான் கெத்து, அதுதான் தில், அதுதான் தூள். எல்லாவிஷயத்திலும் முதன்மையாக இருப்பவர், நடிப்பதிலும் கூட. சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துவிடுவார். அதேபோல மற்ற நடிகர்களிடமும் எதிர்பார்ப்பார். இவர் ஒரு தைரியசாலி. வாழ்க்கைக்கும் சரி, தொழிலுக்கும் சரி, அரசியலுக்கும் சரி தைரியம் முக்கியம்.
 

நான் ஒன்று கேள்விப்பட்டேன், ஒருமுறை மனோரம்மா ஆச்சி வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்போது வழியில் எந்த பெண்மணியின் தங்க சங்கிலியோ பறிக்கப்பட்டு ஒரு திருடன் ஓடியிருக்கிறான். அவனை விரட்டி சென்று பிடித்து கொடுத்திருக்கிறார். யாராக இருந்தாலும் இதனை செய்ய யோசிப்பார்கள். ஆனால், அவரது தைரியமும் மனிதாபிமானமும் எதையும் யோசிக்காமல் மக்களுக்காக செய்ய துணிந்தது. அவர் ஒரு உண்மையான கதாநாயகன். கார்கில் போர் காலகட்டத்தில், மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று வரும்போது திண்டுக்கல் கொடைரோட்டில் பஞ்சம். ரயிலை நிறுத்தி அந்த மக்களுக்கு சாப்பாடு வழங்கியவர் விஜயகாந்த். எல்லோரும் கேட்டால்தான் உதவி செய்வார்கள், ஆனால் கேட்காமலிலேயே உதவி செய்பவர் இவர் ஒருவர் தான். நான் நடித்த வள்ளல் என்ற படம் நிதி பற்றாக்குறையாக இருந்தது. அவருக்கு அந்த செய்தி எப்படியோ செல்ல காலை ஆறு மணிக்கெல்லாம் போன் செய்து வாருங்கள் என்ன என்று போய் பார்த்துவிட்டு வருவோம் என்றார். இத்தனைக்கும் அப்போது நான் ஒரு சக நடிகன். ஒரு போட்டி பொறாமை எல்லாம் இல்லாமல் எனக்காக வரேன்" என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது அவர் படத்திற்குத்தான் வள்ளல் என்ற டைட்டிலை வைத்திருக்க வேண்டும்.
 

அவரும் நானும் நிறைய படங்கள் நடித்திருக்கிறோம். அதில் நிறைய காமெடிகளும் உண்டு. யானை என்னை துரத்த வேண்டும், ஆனால் அது என்னை துரத்தவே இல்லை. அதற்கு விஜயகாந்த் நீங்கள் கையில் வெல்லக்கட்டியை வைத்துக்கொண்டு ஓடுங்கள் யானையும் துரத்தும். கொஞ்சம் ஒடியவுடன் தூக்கி போட்டுவிடுங்கள். சரி விஜய். ஆனா யானை நான் வெல்லத்தை தூக்கி போட்டதே பார்க்காமல் இருந்தால் என் கதி என்ன என்று யோசித்துப்பாருங்கள் என்று அவரிடம் சொன்னேன். அப்போது சிரிக்க ஆரம்பித்தவர்தான் சிரித்துக்கொண்டே இருந்தார்
 

சரத் சொன்னாரு மீம்ஸ் போடுறவங்கள பத்தி, அவனுங்க கிடைக்கிறானுங்க பொடி பசங்க. நீங்க மீம்ஸ் போடும் போது எங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று போடுகிறீர்கள். எதற்கு தெரிய வேண்டும். ஆங்கில ஹீரோக்களுக்கு தமிழ் தெரியுமா? ஷாருக்கானுக்கு தமிழ் தெரியுமா? அவர் அவருக்கு அவர்கள் மொழி தெரிந்தால் போதும் அவ்வளவுதான். அவருக்கு தமிழ் தெரியும்ல அது போதும். எனக்கும் ரசிகர்களை வளர்த்துக்கொள்ளுங்கள், மன்றங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லுவார். அவருக்கு அவர் ரசிகர்கள், தொண்டர்கள் தான் கடைசி வரை. ரசிகர்களின் மேல்அப்படியொரு அன்பு அவருக்கு உண்டு. அப்படியொரு நல்ல நண்பர் எனக்கு கிடைத்ததை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் நாற்பது வருடத்தை கடந்துவிட்டோம். நண்பனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய நல்ல உள்ளம் அவர், அவரது விழாவை சிறப்பிக்க வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்

Next Story

"மேலோட்டமா பாத்தா ஆபத்துகள் தெரியாது" - சத்யராஜ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
sathyaraj speech in dmk stage

தி.மு.க சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா - சுய மரியாதைச் சுடர் திராவிட இனமானத் தொடர்’ எனும் தலைப்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் புகழரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் பா.விஜய் மற்றும் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், “பா. விஜய் பேசுனதில் ரொம்ப முக்கியமான விஷயம். வட நாட்டிலிருந்து மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வரலாம்னு பார்க்குது. அதை விட்ராதீங்க என பேசினார். அதை விடமாட்டோம். ஏன்னா, தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். வட நாட்டு காரவங்களுக்கு தான் அது மதப்புயல். இங்க இருக்கிறவங்களுக்கு அது மடப்புயல். இங்க இருக்கிற எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பி போல பழகிட்டு வரோம். எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும் மற்றவர்களோடு ஒன்னு மண்ணா தான பழகிட்டு இருக்கோம். இப்படி இருக்கும் போது இங்க மதத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது.  

எல்லாருமே ஒற்றுமையா இருக்கிறோம். இது எப்படி பண்ண முடியும். இது நீதி கட்சியினுடைய நீட்சி தான் என தோழர் அருள்மொழி சொன்னாங்க. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து பள்ளிகூடத்தை ராஜாஜி மூடினார். மூடுவதற்கு முன்னாடி யார் திறந்தாங்க என்பதை அருமையாக சொன்னாங்க, நீதி கட்சி திறந்து வத்த பள்ளி அது. நீட் தேர்வுக்கு முன்னாடியே பெரிய கேட் அந்த காலத்தில் போட்டிருக்காங்க. அது சரியா தவறா என தெரியவில்லை. நீதி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, மெடிக்கல் காலேஜ் சேருவதற்கு சான்ஸ்கிரிட் தெரிஞ்சிருக்கனும். இதை விட சூப்பர் காமெடி யாருமே பண்ண முடியாது. மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்மந்தம். அப்படி ஒரு திட்டம் வைத்தால் தான் நம்ம புள்ளைங்கெல்லாம் சேர முடியாது. இப்போ அதே திட்டத்தை நீட் என கொண்டு வராங்க. நம்மளை படிக்க விடக்கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு எதையோ பண்றாங்க. ஆனா நம்ப படிச்சிகிட்டே இருக்கோம். இன்னைக்கு எல்லா இடத்துலையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவங்க பெரியளவில வந்துட்டாங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப் பெரிய சாதனை” என்றார். 

மேலும் “பாம்பேவுக்கு ஷூட்டிங்கிற்காக இப்போது போனேன். அங்கு பீப் ஸ்டாலே கிடையாது. அப்போ... எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என முடிவெடுக்க வேண்டியது நான் தானே, நீ எப்படி முடிவெடுக்கலாம். இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது. இங்க இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், ஜாதியை சேர்ந்தவர்களும் ரொம்ப ஒத்துமையா இருக்கோம். அது சீர்குலைந்து போகக் கூடாது. நாம் முன்னோக்கி தான் போகணும்” என்றார். 

Next Story

“என் கொள்கைகளை பேசும் படமாக அமைந்தது” - சத்யராஜ்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

sathyaraj speech in valli mayil audio launch

 

சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்’. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தாய் சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 80களின் நாடகக்கலை பின்னணியில்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இவ்விழாவினில் சுசீந்திரன் பேசியதாவது, “நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7  வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர். அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம்” என்றார்.

 

விஜய் ஆண்டனி பேசுகையில், “சுசீந்திரன் சார் உடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். பிச்சைக்காரன் படமெடுக்கும் போது, இந்தப் படம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது. இந்த படத்தில் இயக்கம் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுசீந்திரன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் இணைந்து திரையில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் நான் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். அவரது அப்பா எனக்கு நெருக்கம். அவரது வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

 

சத்யராஜ் பேசுகையில், “நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம். அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும். விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. வள்ளி மயில் எனப் பெண் கதாப்பாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி.  இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார், உங்கள் மனதிற்கு நன்றி. ஃபரியா மிகச்சிறந்த நாயகி, எது சொன்னாலும் உடனே செய்வார். புதுமையான கதைக்களம். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்” என்றார்.