Skip to main content

வடகொரியா – வடகறியா? கொத்துக்கறியா?

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

1950ல் தொடங்கி கடந்த 68 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்கள் யாருடனும் கொரியா அதிபர்கள் சந்தித்ததில்லை. டெலிபோனில்கூட பேசியதில்லை. வடகொரியாவை ரவுடி நாடு என்று அமெரிக்கா தொடர்ந்து முத்திரை குத்தி வந்திருக்கிறது.

 

வடகொரியாவின் ராணுவரீதியிலான வளர்ச்சியை அமெரிக்காவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அமெரிக்காவை சாராமல் தனித்து இயங்கும் நாடுகளை அமெரிக்காவுக்கு பிடிக்காது என்பது வரலாற்று உண்மை.

 

தன்னை எதிர்க்கும் நாடுகளை அழித்தொழிப்பதே அமெரிக்காவின் முழுநேர வேலை என்று கிண்டலாக கூறுவது வாடிக்கை. அந்த வகையில் தனக்கு போட்டியாக மூன்றாம் உலக நாடுகளின் பாதுகாவலனாக இருந்த சோவியத் யூனியனை திட்டமிட்டு சிதைப்பதில் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட நாடுகளில் யூகோஸ்லாவியா ரொம்ப முக்கியமானது. இராக்கை மிரட்டி, தடைகள் போட்டு, ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் சொல்லி, கடைசியில் அந்த நாட்டை இன்றுவரை ரத்தக்களறியாக்கி வைத்திருக்கிறது.

 

 

 

லிபியா, எகிப்து, துனிஷியா, ஆப்கானிஸ்தான், சமீபத்தில் சிரியா என்று அமெரிக்காவின் கைங்கர்யம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தென்னமெரிக்காவில் வெனிசூலா, பொலிவியா நாடுகளில் அந்த நாடுகளின் சோசலிஸ்ட் அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் போராட்டங்களை அமெரிக்கா ஊக்கிவித்து வருகிறது. உலகில் எங்கெல்லாம் ஆயுதமோதல் தொடர் நிகழ்வாக இருக்கிறதோ அங்கெல்லாம் மூலகாரணமாக அமெரிக்காவே இருக்கிறது.

 

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத வடகொரியாவை ட்ரம்ப்பும் தனது பங்கிற்கு சமீபகாலமாக கடுமையாக மிரட்டிப் பார்த்தார்.

 

அணுஆயுத சோதனைகளில் வடகொரியா பெற்ற வெற்றிகள், அது நடத்திய அடுத்தடுத்த சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி என்று அடுத்தடுத்து ட்ரம்ப் காண்டாகிவிட்டார். தென்கொரியாவும், ஜப்பானும் அலறத் தொடங்கின.

 

அதைத்தொடர்ந்து அமெரிக்கா நினைத்தால் வடகொரியாவை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவோம் என்றுகூட ட்ரம்ப் மிரட்டினார். அந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டோம். வடகொரியாவைத் தாக்க நினைத்தால், அமெரிக்க நகரங்களை தகர்ப்போம் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடுமையாக எச்சரித்தார்.

 

 

 

அதைத்தொடர்ந்து வழக்கம்போல அமெரிக்கா தனது ஊதுகுழலாக பயன்படுத்தும் ஐ.நா.சபை உதவியோடு வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தத் தடையைத் தொடர்ந்து சீனா மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டது. சீனாவும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக இருக்கின்றன. எனவே, அமெரிக்கா வடகொரியா மீது கைவைக்க பயப்படுகிறது. வடகொரியா மீதான எந்த கடுமையான நடவடிக்கையும் அமெரிக்காவை கடுமையாக பாதிக்கும் என்பதை ட்ரம்ப் உணர்ந்தார்.


 

 

இந்நிலையில்தான், தென்கொரியாவுடன் தனது நட்பை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியா அதிபர் புதிய முயற்சிகளை தொடங்கினார். இரண்டு கொரியா மக்களும் ஒரே நாடாக இணையவே விரும்புகிறார்கள். உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தை வைத்துள்ள, அணுஆயுத பலத்துடன் அமெரிக்காவையே அச்சுறுத்தும் வகையில் வளர்ந்துள்ள வடொகொரியாவுடன் இணைய தென்கொரியா மக்கள் விரும்புகிறார்கள்.

 

 

 

தனித்து தனது ஆயுதபலம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ பலம் ஆகியவற்றை உறுதிப்படுத்திய வடகொரியா, பொருளாதார தடையை நீக்கி, உலகமய கொள்கைகளை அமல்படுத்தி உலகத்தோடு ஒத்துப்போக விரும்பியது. எனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சமாதான முயற்சிகளை ஏற்க கிம் ஜோங் உன் முன்வந்தார். ஆனால், இடையில் வடகொரியா பயந்துவிட்டதுபோன்ற செய்திகளை அமெரிக்கா கசியவிட்டது. இதையடுத்து, அமைதி முயற்சியை ரத்துசெய்வோம் என்று வடகொரியா மிரட்டியது.

 

இந்நிலையில் தென்கொரியா அதிபர் முயற்சியில் கிம் ஜோங் உன் மீண்டும் சமாதானம் அடைந்தார். இதையடுத்து திட்டமிட்டபடி சிங்கப்பூரில் இரு நாடுகளின் அதிபர்களும் நாளை சிங்கப்பூர் அருகே உள்ள சென்டோஸா என்ற உல்லாசத் தீவில் பலத்த பாதுகாப்போடு சந்தித்து பேசப் போகிறார்கள்.

 

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் வடகொரியாவின் வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்படும் என்கிறார்கள். தன்மீது படையெடுப்பு இருக்காது. பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற இரண்டு முக்கியமான கோரிக்கைகளைத்தான் வடகொரியா முன்வைத்துள்ளது. இதை ஏற்றால், வடகொரியா தன்னிடமுள்ள அணுஆயுத கூடங்களை அழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வடகொரியாவை நிராயுதபாணியாக்கிவிட்டு, அந்த நாட்டைச் சிதைக்க வேறு தந்திரமான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடக்கூடும் என்ற அச்சமும் உருவாகி இருக்கிறது.

 

உலகமயக் கொள்கைகளை அனுமதிக்க வேண்டும், தனது தொழில்களை தொடங்க வடகொரியா உதவவேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா கேட்கக்கூடும். அப்படியே கேட்டாலும் சீனா பாணியில் சில நிபந்தனைகளோடு வடகொரியா அனுமதிக்கலாம். எப்படி இருந்தாலும் லிபியா உள்ளிட்ட நாடுகளைச் சிதைத்ததுபோல வடகொரியாவை வடகறியாகவோ, கொத்துக்கறியாகவோ அமெரிக்கா சாப்பிட்டுவிட முடியாது என்பது மட்டும் உறுதி.

 

என்றாலும், நீண்டகால பகையை மறந்து இரண்டு நாடுகளும் கைகுலுக்குவது உலக அமைதிக்கு உதவும் என்ற நம்பிக்கையில் வரவேற்போம்.

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

“அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றி” - நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியில் டிரம்ப்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Trump happy with court ruling and he posted "Victory for America" ​​

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், இந்த ஆண்டு (2024) நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (05-03-24) அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடத் தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில், ‘அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.