Skip to main content

மிஸ் இந்தியாவான திருச்சி பொண்ணு !!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

கடந்த வருடம் உலக அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் வெற்றிப்பெற்றது இந்தியமக்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுபோல தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் லயோலா கல்லூரி மாணவி அனுக்ரீத்தி. மனுஷி உலக அழகி பட்டம் வென்றதை போல இவர் இந்த வருட இந்திய அழகி போட்டியை வென்று 2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பங்குபெற இருக்கிறார்.
 

miss india

 

 

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பெமினா இந்திய அழகி போட்டியில் மொத்தமாக முப்பது அழகிகள் பங்குபெற்றனர். இந்த விழாவை பாலிவுட்டின் வெற்றி இயக்குனரான கரன் ஜோகர் மற்றும் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தொகுத்து வழங்கினார்கள். மேலும் இந்த விழாவின் நடுவர்களாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எல். ராகுல், பாலிவுட் நடிகர்களான மலைக்கா அரோரா, பாபி தியோல் மற்றும் குணால் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாதுரி தீக்ஷித், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் கரீனா கபூர் போன்ற நடிகைகளின் நடனமும் மேடையில் அரங்கேறியது.   

 

 

 

மகுடம் சூட்டப்பட்ட அனுக்ரீத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பத்தொன்பது வயதே ஆகும் இவர் சென்னை லயோலா கல்லூரியில் இரண்டாம் வருடம் பி.ஏ பிரென்ச் மொழி படித்து வருகிறார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர் நடிப்பிலும் ஆர்வம் மிக்கவராம். ஐஸ்வர்யா ராயை பார்த்து இது போன்று உலக அழகி பட்டம் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆடல், பாடலில் ஆர்வமிக்கவராக இருந்தாலும் மாநில அளவிலான தடகள வீரரும் கூட. தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். திருச்சியில் பிறந்து, பின்னர் மேல்படிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இவர் 2018 க்கான தமிழ்நாடு அழகி போட்டியில் வென்றவர். மேலும் மிஸ் இந்தியா அழகிய சிரிப்பு 2018 மற்றும் தென்னகத்தின் ஐகான் என்று பல மகுடங்களை அணிந்துள்ளார்.

 

இப்போட்டியில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி," உங்களுக்கு ஆசான் யார் தோல்வியா ? அல்லது வெற்றியா ?" 

 

தோல்விதான் எனது ஆசான். ஏனென்றால் வெற்றியை மட்டுமே பார்த்துவந்திருந்தால் ஒரு கட்டத்தில் அதுவே போதும் என்று  நினைத்து நின்றுவிடுவோம். ஆனால், நீங்கள் ஒரு விஷயத்தில் இறங்கி தோல்வியையே சந்தித்து வந்தால்தான் அது அணையாத நெருப்பாக நம் மனதில் இருக்கும். அப்போதுதான் இலக்கை நோக்கி பயணித்து வெற்றியடைய முடியும் என்கிறார் இந்த தமிழ்நாட்டு அழகி.   

Next Story

அழகு க்ரீம் ஆபத்து: எச்சரிக்கும் இந்திய மருத்துவர்கள்

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

அழகு க்ரீம் போட்டால், அழகு மட்டும்தான் வரும் என்றில்லை, தோல்நோய்கூட வரலாம். அழகைத் தேடிப்போய் அவலட்சணத்துக்கு ஆளாகாதீர்கள் என எச்சரிக்கிறது இந்திய தோல்நோய் மருத்துவர்களின் கூட்டமைப்பு.

 

Beauty

 

அதிக மக்கள்தொகையும் கருப்பு, பழுப்புநிற மக்களும் நிறைந்துள்ள ஆசிய நாடுகளை அழகுபொருட்கள் சாதன நிறுவனங்கள் குறிவைத்து தம் சந்தையை விரிவுபடுத்துவதில் ஆர்வம்காட்டுகின்றன. இந்தியச் சந்தையில் அழகை இலக்காய்வைத்து வரும் அழகு க்ரீம்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது இலகுவானதல்ல.

 

மக்களின் இந்த அழகு நாட்டத்தைப் புரிந்துகொண்டு லாபநோக்கு ஒன்றே குறிக்கோளாய் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் ஸ்டீராய்டுகளையும், சரும நோய்களுக்கான மருந்துகளில் ஹெவிடோஸ் மருந்துகளையும் பயன்படுத்துவதாக ஐ.ஏ.டி.வி.எல். (IADVL) குற்றம்சாட்டியுள்ளது.

 

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உலக சரும ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது. இந்திய தோல்நோய் கூட்டமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் பேசியபோது இந்தியாவில் பூஞ்சைகளால் மனித சருமத்துக்கு ஏற்படும் நோய்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாகவும், இத்தகைய பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சையாக அளிக்கப்படும் மருந்துகளுக்கு நோய் கட்டுப்பட மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

 

சில அழகு சாதன நிறுவனங்களும், மருந்துக் கம்பெனிகளும் தங்கள் மருந்துகளில் ஸ்டீராய்டைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றனர். சுகாதார அமைச்சகம் சரியான சமயத்தில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.