Skip to main content

இவர் மேல் ஏன் இவ்வளவு லவ்? - ஜஸ்டின் ட்ரூடோவின் கதை!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

ஜனவரியை "தமிழ் பாரம்பரிய மாதமாக" அறிவித்த முதல் நாடு என கனடா பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா நாட்டில் இளைய வயதிலேயே பிரதமரான இரண்டாவது நபர் இவர்தான். தமிழ் மொழியின் மீது எப்போதும் நன்றி கொண்டவர். தற்போது இந்தியாவிற்கு ஏழு நாள் பயணமாக வந்த இவர் ஒரு பக்கம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மற்றொரு  பக்கம் ஆக்கப்பூர்வமான உரைகளையும் இந்தியர்களோடு இந்தியராக செய்துகொண்டிருக்கிறார். ஆனால் இவர் இந்தியா வந்திறங்கியபோது இவருக்கு குறிப்பிடும்படியான வரவேற்புகள் வழங்கப்படவில்லை, மேலும் ஒரு நாட்டின் பிரதமருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை (ஒருவேளை மோடியின் பயணத்திட்டத்தில் கனடா இல்லைபோலும்)  
 

justin trudeau


ஆறடி டாம் க்ரூஸ் போன்ற உருவத்தில், மஞ்சள் நிற ராமராஜன் சட்டை, கீழே ஜரிகை வேஷ்டி இதெல்லாம் கலந்த கலவையாக நினைத்து பாருங்கள் ஹாலிவுட் ஹீரோ தமிழில் நடிக்க வந்தது போல் இருக்கும். அந்த கெட்டப்பில்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த பொங்கலன்று கனடாவில் வலம் வந்தார் பொங்கல் கொண்டாட்டங்களுடன். உலகமுழுக்க உள்ள தமிழர்களுக்கு நன்கு தெரிந்த பிரதமர்கள் இரண்டு பேர் அதில் ஒருவர் இந்திய பிரதமர் மோடி, மற்றொருவர் கனடா பிரதமர் ஜஸ்டின் தான்.
 

justin trudeau


ஜஸ்டின் ட்ரூடோ, டிசம்பர் 25, 1971ல் கனடா தலைநகர் ஒட்டாவாவில் பிறந்தவர். இவரது தந்தையும் கனடாவின் பிரதமராக இருந்தவர். அவர் பெயர் பியரே ட்ரூடோ. "என்னடா இது இந்தியாவுலதான் குடும்ப அரசியல்னு பார்த்தா கனடாவிலுமா" என்பவர்களுக்கு இன்னொரு செய்தி. ஜஸ்டின் 2007ம்  ஆண்டு கனடாவில் வெளிவந்த ஒரு டிவி சீரியலான 'தி கிரேட் வார்' இல் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகனாக இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாது தலைவரே. நடிக்கிற உங்களுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும் அப்படினு கேட்பவர்களுக்கு பதிலாக அவர் ஆசிரியர் அவதாரமும் எடுத்திருந்தார். அதன் பிறகு அரசியலில் நாட்டம் கொண்ட அவருக்கு 2008ல்  லிபெரல் கட்சியின் இளைஞரணி போஸ்ட் கிடைத்து. போகப் போக 2013ல் அக்கட்சியின் தலைவரானார். (ஓ... இவர் அந்த ஊரு செயல் தலைவரா அப்படினு கேக்காதீங்க) அதன்பின் 2015ல் கனடா தேர்தலில் பிரதமர் பதவிக்காக போட்டியிட்டு வென்றார்.   
 

justin trudeau


இவர் "இது கனடா, இங்கு எங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமே இருக்க வேண்டும் வேறு யாரும் இருக்கக் கூடாது" என்றெல்லாம் டிரம்ப் போல் எப்பொழுதும் பேசியதில்லை. இவர் உலக பேமஸ் ஆனதற்கு காரணமே கனடாவில் வாழும் அனைத்து மக்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் மதித்தார் என்பதற்காகத்தான். குறிப்பாக அங்கு இருக்கும் தமிழர்களின் மீது அதிக மதிப்பு கொண்டிருந்தார். அதனால்தான் இத்தனை சிறிய வயதில் அவ்வளவு பேமஸ் ஆனார். கனடாவில் 1,57,000 தமிழர்கள் இருக்கின்றனர் (சென்செஸ் படி). ஆனால் அங்கு வாழும் தமிழர்களோ 2,00,000ற்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றோம் என்கின்றனர். உலகில் அதிக தமிழர்கள் வாழும் இந்தியாவில்கூட தமிழர்களை சிறப்பு செய்யும் விதமாக மத்திய அரசு எந்த திட்டங்களையும் அவ்வளவாக கொண்டுவரவில்லை. ஆனால், இவரோ ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டு வந்தார். அவர் தமிழர்களைப் பற்றி கூறுகையில், " கனடா வாழ் தமிழர்கள் இந்த நாட்டிற்காக நிறைய பங்காற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழின் பெருமையை வருங்காலம் அறியவே ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்து சிறப்பித்துள்ளோம்" என்றார். தனது டிவிட்டர் பக்கத்திலும்கூட 'இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்' என தெரிவித்தார். இவருக்கு தமிழ் சிறப்பாக பேச தெரியாவிட்டாலும், தமிழை மதிக்க தெரிந்த மனிதர். இப்படி தமிழை மதித்தாலே போதும், தமிழ் வளமும், வாழ்வும் பெறும்.  தமிழனாய் இருந்தால் லைக் செய், மானத்தமிழனாய் இருந்தால் ஷேர் செய் என சமூக ஊடங்களில் பதிவிடுபவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு பாடமாக அமையும்.

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.