Skip to main content

சோபியா திடீர் ஆவேசத்தில் கத்திய பெண்ணல்ல; அவர் அன்றே அப்படி... 

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

 

 

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை முன்பு “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என முழக்கமிட்டார். கீழே இறங்கி வந்து விமான நிலையத்திலும் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.விமானத்தில் கோஷமிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆளும் கட்சியைத்தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்கு செல்லும்முன் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் உடல்நலமின்றி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் நிபந்தனையற்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட நாளன்று “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பதும், அவர்மீது  இ.அ.ச. 285/18 மற்றூம் 290, 75(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


28 வயதான சோபியாவின் முழுபெயர் லூயிஸ் சோபியா. அவரது அப்பா ஏ.ஏ. சாமி அரசு மருத்துவமனை மருத்துவராகவும், அம்மா மனோகரி தலைமை செவிலியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்கள். கனடாவிலுள்ள மான்ட்ரீல் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் இவர் இயற்பியல் மற்றும் கணிதத்தில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார்.
 

இவர், தமிழிசையைப் பார்த்து திடீரென ஆவேசமாக கத்திவிட்டார் என பலரும் கூறுகின்றனர். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. முழக்கமிடும் முன்னரே தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இப்போது தமிழிசையுடன் விமானத்தில் இருக்கிறேன். எனக்கு இப்போது எனக்கு “பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக” என கத்த வேண்டும் போல் உள்ளது, இதற்காக என்னை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவார்களோ” என ட்விட் செய்துள்ளார். அதன்பின்பே முழக்கமிட்டுள்ளார். இதற்குமுன் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விரிவான அவரது கட்டுரைகள் ‘தி வயர்’ என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியானது.
 

 

 

பெரியார் சிலைகளை உடைப்போம் எனக்கூறிய ஹெச்.ராஜாவையும், பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல், இவரை அதுவும் இவ்வளவு வேகத்தில் கைது செய்திருப்பதைப் பார்த்தால் அவர் கூறியது உண்மைதான் என தோன்றுகிறது. விமானத்தினுள் இன்னொரு பயணிக்கு தொல்லை கொடுத்ததால் அவர் கைது செய்யப்பட்டது சரி என பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநில தலைவர் அவர், அவர் முன் மத்திய அரசின் மீதான அதிருப்தியையே அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த அவர், அங்கு ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு நிகழ்த்திய கொலைகளை எப்படி மறக்க முடியும்? இந்த குறிப்பிட்ட சம்பவம் எப்படி இருந்தாலும், பொதுவாக இந்த அரசுகளின் பாரபட்ச கைது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சோபியா முழக்கமிட்ட வார்த்தைகள் உண்மை என்றே படுகிறது. அது மாநில அரசுக்கும் பொருந்துமென்றே தோன்றுகிறது. 

 

 

 

 

 

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.