Skip to main content

"தலித்துகளையும் விவசாயிகளையும் இவர்கள் பார்க்கும் பார்வை..." - இயக்குனர் பாண்டிராஜ் கோபம்!  

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் 'விவசாயம் என்பது முற்றிலும் ஓய்ந்துவிட்ட தொழில் அல்ல, விவசாயிகள் அனைவருமே வறுமையில் இருக்கும் ஏழைகள் அல்ல, விவசாயம் செய்தாலும் நல்ல வருமானத்தை பெறலாம்' என்பதை காட்டியுள்ளது. படத்தின் பல காட்சிகளில் விவசாயத்தின் பெருமையை வசனங்கள் ,மூலமாகவும் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் பாண்டிராஜ். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து இயக்குனர் பாண்டிராஜிடம் பேசியபோது அவர் பகிர்ந்தது...

 

pandiraj



"பொள்ளாச்சியில் இருந்து ஒரு விவசாயி எனக்கு தொலைபேசி மூலம் பேசினார்,"விவசாயி என்றாலே கஷ்டப்படுபவர்கள், கோமணம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள், எலிக்கறி சாப்பிடுபவர்கள் என்ற மாயை இருந்தது. ஆனால், நான் நன்றாகத்தான் சம்பாதிக்கின்றேன். விவசாயிகளை கெத்தாக காட்டியுள்ளீர்கள். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் என்னுடைய வண்டிகள் அனைத்திலும் விவசாயி என்று எழுதிக்கொள்ள போகிறேன்" என்று அந்த விவசாயி என்னை வாழ்த்தினார்.

 

 


திரையரங்குகளில் விவசாயி பற்றிய வசனங்களின்போது மக்கள் அனைவரும் கைதட்டிக் கொண்டாடுகின்றனர். எந்த ஒரு துறையிலும் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. கஷ்டம் இல்லாத தொழில் எதுவும் இல்லை, ஆனால் விவசாயத்தில் அதிக கஷ்டங்களும் இருக்கு. அதை அரசாங்கம்தான் சரி செய்து விவசாயத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும். நானும் விவசாயிகளை கஷ்டப்படுகிறார்கள், எலிக்கறி சாப்பிடுகிறார்கள், வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விவசாயத்துக்குள்  வரவே பயப்படுவார்கள்.

  karthi farmer



எனக்குத் தெரிந்த விவசாயிகள் பலர் என்னை தொடர்புகொண்டு, பாராட்டுகின்றனர். அவர்களுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது. கிட்டத்தட்ட இந்த சமூகத்தில் தலித்துகளையும் விவசாயிகளையும் ஒரே மாதிரிதான் பார்க்கின்றனர். இருவரையும் 'நீங்கள் அப்படித்தான், நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்' என்று சித்தரித்து வைத்திருந்தனர். நீங்கள் யார் அவர்களை அப்படி பார்ப்பதற்கு? இப்போது தலித் சமூகம் வெகுண்டு, வளர்ந்து வருகிறது, நாங்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது என்று. அதேபோலத்தான் விவசாயத்தையும் சொல்ல நினைக்கிறன். என்னுடைய நண்பர்களே விவசாயம் செய்து புல்லட், டிராக்டர் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் விவசாயி புல்லட் வைத்திருப்பதாக காட்சிப்படுத்தியதை வெளியே பலர் கிண்டல் கூட செய்கிறார்கள் . நீங்கள் என்ன விவசாயிகள் என்றால் சைக்கிளில் செல்பவர்கள் என்று நினைக்கிறீர்களா? பல விவசாயிகள் புல்லட் டிராக்டர் என்று வாகனங்களை வைத்திருப்பவர்களாகவும், லட்சக்கணக்கில் சம்பாதித்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்".       

      
 

 

 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.