Skip to main content

'எனக்கு பெட்டிச் செய்தி; ரஜினிக்கு தலைப்பு செய்தி' - சீமான் ஆவேசம்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகஸ்ட் 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட செங்கொடி நினைவாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போதும், " பல பேருக்கு நம்மை பார்த்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது. எல்லாம் கொஞ்ச காலம்தான். காலம் விரைவில் மாறும். கட்டளை இடும் இடத்திற்கு வருவோம். ஜாதி, மதத்தால் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற வேறுபாட்டை சொல்பவர்களை காலம் நிச்சயம் புறந்தள்ளும். தலையில் பிறந்ததால் நாங்கள் உயர்வானவர்கள் என்று நீங்கள் சொல்லும்போது, காலில் பிறந்ததால் உங்களை உதைப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நாங்கள் ஏன் சொல்லக் கூடாது.

 

h



உலகத்தின் பேரறிஞர்களை உருவாக்கியவர்கள் நாங்கள். வள்ளுவனை தாண்டி இங்கே ஒருவரும் இல்லை. அவரை யாரும் அடித்துக் கொள்ள இன்றளவும் முடியவில்லை. அவன் ஒரு ஞானி. கம்பன், இளங்கோவனை தாண்டி பாவலன் யாராவது உள்ளார்களா? ஒருத்தனும் இல்லை. இதை பற்றி யாராவது பேசுகிறார்களா என்றால் இல்லை. ரஜினி படத்தின் வசனத்தை மனப்பாடமாக பேசுவதா நமக்கு பெருமை. பிரபாகரன், ரஜினி, அஜித், விஜய் இதில் யார் பெரியவங்கனு கேளுங்க. சினிமா நடிகர்களின் பெயர்களைதான் கூறுவார்கள். கேளிக்கையில், கொண்டாட்டத்திலும் மூழ்கியுள்ள சமூகத்தை போராட்டத்திற்கு கொண்டுவருவது சிரமம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாம் அதனை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

17 லட்சம் போராளிகளை இதுவரையில் உருவாக்கி இருக்கிறோம். இது விரைவில் அதிகரிக்கும்.எதற்கெடுத்தாலும் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூறும் நீங்கள் ஒரு ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்திவிட்டு எதற்காக 5 நாட்கள் காத்திருக்க வேண்டும். 5 ஆம் தேதி வாக்கு பதிவு முடிந்த உடனே, வாக்குகளை எண்ண வேண்டியதானே? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. பதட்டத்திலேயே மக்களை வைத்து இருக்கனும். அதானே உங்கள் ஆசை. தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுறுவல் என்கிறார்கள். அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள். எப்படி வந்தார்கள். வானத்தில் இருந்தா வந்தார்கள். அவர்கள் உள்ளே வரும் போது நீங்கள் என்ன செய்து கொண்டீருந்தீர்கள்.

நாம ஒரு காவலாளியை வீட்டின் பாதுகாப்புக்கு எதற்காக வைத்திருக்கிறோம். வீட்டில் இருந்து திருடன் திருடிவிட்டு செல்லும்போது அவனை துரத்தி பிடிக்க அல்ல. வீட்டிற்கு வரும்போதே அவனை பிடித்து கொடுக்கதான். ஆனால் தீவிரவாதிகள் உள்ளே வருவார்களாம், அப்போது அமைதியாக இருந்துவிட்டு, பாமரனிடம் பர்ஸை எடு, பாக்கெட்டை காட்டு என்று அலம்பல் தருகிறார்கள். நாட்டில் உள்ள எவ்வளவோ பிரச்சனைகளை மடைமாற்ற இதை ஒரு வழியாக இப்போது பயன்படுத்துகிறார்கள். நான் 40 தொகுதிகளில் போட்டியிடுவதை பெட்டி செய்தியா கூட போடமாட்டேன் என்கிறார்கள். ஆனால், ரஜினி தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். முட்டாளா இருக்கலாம். ஆனால் இந்த அளவு முட்டாளா இருக்க கூடாது" என்றார்.