Skip to main content

திருடு போகிறதா தமிழர் கடல்? - மத்திய அரசின் 'சாகர்மாலா' பற்றி சீமான், திருமுருகன் காந்தி!   

Published on 22/02/2018 | Edited on 23/02/2018

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில்(2003) முன்மொழியப்பட்ட திட்டம் இந்த சாகர்மாலா திட்டம். இந்தத்  திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டில் உள்ள 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகளையும் ஒன்றாக இணைத்து சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் மாற்றுவதே. முதல்கட்டமாக 1000 கோடி செலவில் இந்தியாவிலுள்ள 12 துறைமுங்கள் மற்றும் 1,208  தீவுகளை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவது, 189 கலங்கரை விளக்கங்களை நவீனப்படுத்துவது தொடங்கும். நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் துறைமுகங்களுக்கும் பங்குண்டு. இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது  சீனாவில் 24 விழுக்காடும், நெதர்லாந்து 42 விழுக்காடும், அமெரிக்கா 7 விழுக்காடும் அந்தந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் துறைமுக வர்த்தகம் பங்களித்துள்ளது. ஆனால், இந்தியாவில் துறைமுகங்களின் மூலமான பொருளதார பங்களிப்பு வெறும் 3 விழுக்காடே, துறைமுகங்கள் மூலமான பொருளாதார பங்களிப்பை அதிகப்படுத்துவதே இந்த திட்டம் என மத்திய அரசால் விவரிக்கப்படுகிறது.

 

Sagar Mala Project


ஆனால் இவ்வளவு வளர்ச்சிகள் இருந்தாலும் தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக்   கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். மற்றும் கார்ப்ரேட் வர்த்தகம் தலைத்தோங்கும் என்று தமிழ் ஆர்வளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். காரணம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் அறிக்கையிலே இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என ஒரு உரையையும் அளித்துள்ளது. அதாவது 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும், இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பதையே 'கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்ஸ்' என்று நாசுக்காக சொல்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 'மே பதினேழு' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரிடம் இந்தத் திட்டம் குறித்துக் கேட்டோம். 

சீமான் 
 

Seeman Sagar Mala



7000 கிமீ கடல்வழிச்சாலை, 14500 கிமீ உள்நாட்டு நீர்வழிச்சாலை, இதை ஒன்றிணைப்பதுதான் இந்த சாகர் மாலா திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை நோக்கம் என்னவென்றால் ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி? இங்குள்ள  நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற  வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது. வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது. இலங்கையில் திரிகோணமலையை சீனா 900 ஆண்டுகளுக்கு 9,500 கோடி லீசுக்கு எடுத்துவிட்டது. அதேபோல் தனுஷ்கோடியை  மக்கள்  வாழ வாய்ப்பற்ற இடம் என அறிவித்து ராணுவ முகாம் அமைக்கிறது மத்திய அரசு. அணு உலை அமைப்பதல்ல அணு பூங்கா அமைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். அதேபோல் கடலூர் நாகபட்டினம் சுற்றியுள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டங்களாக அறிவித்துள்ள அரசு அதைச்சுற்றியும்  இராணுவமுகாம் அமைக்கும்.  எல்லாம் இராணுவ மயமான பிறகு மக்களால் கிளர்ச்சியே செய்யமுடியாத, உரிமையை கேட்டுபெறமுடியாத நிலையை உருவாக்குவதே நோக்கம். இதுதான் நடக்கும் என கணிக்கமுடிகின்ற இந்த சூழ்நிலையில இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கொண்டுபோய் எச்சரிக்கை உணர்வை உருவாக்கவேண்டும். அடிமை இந்தியாவில் போராட ஒரு காந்தி, ஒரு பகத்சிங், ஒரு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக முடிந்தது. ஆனால் விடுதலை இந்தியாவில் அது கடினம். கருவிலேயே அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட போக்கு நடந்துவருகிறது.

'சாகர்மாலா திட்டத்தினால்  துறைமுகம் சார்ந்த மீன் பதப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மற்றும் துறைமுகம் சாராத மாற்று வேலைவாய்ப்பு பயிற்சிகள், விவசாயம் செய்வது, கைவிணைப் பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகள். மீனை ஏற்றுவது இறக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்' என்று மத்திய அரசு கூறுகிறது. அப்போ இவர்களுடைய நோக்கம்  ஆழ்கடலுக்குள் மீனவன் மீன் பிடிக்க செல்லக்கூடாது, கூட்டிணைவு (corporate) நிறுவனங்கள் கையில் கொடுத்திட வேண்டும். விளைநிலத்தை விட்டு வேளாண்குடிமக்களை வெளியேற்ற வேண்டும், கடல் பரப்பை விட்டு மீனவனை வெளியேற்றவேண்டும், பொறுப்புகளை  எல்லாம் கார்ப்ரேட் எனும் கூட்டிணைவு நிறுவனங்களுக்கு  தாரைவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த சாகர் மாலா திட்டம் என்பதே மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும்முயற்சி எனவேதான் இதை எதிர்க்கிறோம்.

திருமுருகன் காந்தி

 

Thirumurugan gandhi Sagar Mala

 

காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றார்களோ, விவசாய நிலங்களிலிருந்து எப்படி விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்களோ அதுபோல மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையே இந்தத் திட்டத்தின் அடிப்படை கொள்கை. மீனவர்களின் கடல், மீனவர்களுடைய கடற்கரை மற்றும் வாழும் நிலப்பரப்பு போன்றவைகளை கையகப்படுத்தி கார்ப்ரேட்டிடம் ஒப்படைப்பதே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்படும் துறைமுகம் வெறும் வணிக துறைமுகம் மட்டுமல்ல அது பின்னாளில் ராணுவ துறைமுகமாகவும்  மாற்றப்படும்.

திரிகோணமலை துறைமுகத்தின் அருகில் உள்ள சம்பூரில் அனல்மின்நிலையம் அமைக்க கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இந்திய அரசு கையகப்படுத்தி அங்கு வாழ்ந்து வந்த பூர்வீக குடிகளை வெளியேற்றியது. அந்தப் பகுதியை பாதுகாக்க இராணுவத்தை நிறுத்தியது. இப்படி இருக்க திரிகோணமலையை அமெரிக்காவினுடைய கப்பல் படை பாதுகாப்புத் தளமாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை போடுவதற்காகவும் அந்த துறைமுகத்தை பயன்படுத்துவதற்காகவுமே  இனப்படுகொலை அங்கு நடத்தப்பட்டது. இதுதான் அதன் அடிப்படை.

எண்ணூரிலிருந்து ஆரம்பித்து தமிழ்நாட்டின் கடைசி கடற்கரை  கிராமமான நீராடிவரை பல்வேறு துறைமுகங்கள் வரப்போகின்றன. அந்த துறைமுகங்கள் அனல்மின்நிலைய துறைமுகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான துறைமுகமாக அல்லது ராணுவ பயன்பாட்டிற்கான துறைமுகமாக இருக்கும். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பூர்விக குடிமக்களை முற்றிலும் அகற்றப்படும் சூழ்நிலை வரும்.

அப்படி வெளியேற்றப்பட்ட மீனவர்களை மறுவாழ்விற்க்கு கொண்டுவருவது, மீனவர்களை மாற்று தொழிலுக்கு பயிற்றுவிப்பது என மத்திய அரசு சொல்கிறதே, அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் வெறும் 4000 கோடிதான், அந்த 4000 கோடியும் ஒட்டுமொத்த 7000கிமீ  கடற்கரையிலுள்ள ஒட்டுமொத்த  மீனவனுக்கானது. அப்பொழுது  தமிழ்நாட்டு மீனவனுக்கு எவ்வளவு இருக்குமென நன்கு யோசித்துப் பாருங்கள். இதிலுள்ள சதியை மனதில் கொள்ளுங்கள்.  இந்த துறைமுகங்கள் தனியார் மயமாகப்போகின்றன. சுற்றி தனியார் தொழிற்சாலைகள் வரப்போகிறது. எனவே கடல்மாசடைந்து மீன் வளம் குறையும்.

ஒரு நாட்டின் துறைமுகங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை முடிவுசெய்யும் இடம், அப்படிபட்ட துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனியார் கார்ப்ரேட் கைகளில் இயக்கப்படும்போது  பொருளாதாரமும் அவன் சார்ந்து நிற்கப்போகிறது. அதனால் அங்கு நமக்கு கூலிவேலைதான் கொடுக்கப்படும், அடிமை இந்தியாவில் இருந்தது  போல.

சந்திப்பு : அருண்பாண்டியன் 
  

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது