Skip to main content

சேலம் ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரியில் திறந்துவிட எதிர்ப்பு! 'விவசாயம் அடியோடு பாதிக்கும் அபாயம்!'

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

சேலம் ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரியில் திறந்துவிடவும் கிராம மக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏரியில் தேக்குவதால் விவசாயம் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.


சேலத்தை அடுத்துள்ள தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக 4.50 லட்சம் லிட்டர் முதல் 5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்து வருகிறது. தவிர, பால் பவுடர், ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், நறுமணப்பால் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்களும் தயாரிக்கப்படுகிறது. 

salem district aavin milk company water drop at lake


ஆவினில் பயன்படுத்தப்பட்ட நீர், அதன்பிறகு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர், பால் பண்ணையில் திறந்தவெளியில் இரண்டு குட்டைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் என்றாலும், இதுபோன்ற ஆவினுக்கு தேவைப்படாத தண்ணீர் மட்டுமே தினமும் 5 லட்சம் லிட்டர் வரை சேகரமாகிறது. இந்த தண்ணீர் பால் பண்ணை நிலத்தில் நீண்ட காலமாக தேக்கி வைக்கப்படுவதால், ரொட்டிக்காரவட்டம், சித்தனூர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நீரும் மாசடைந்துள்ளது.


பால் பண்ணை கழிவுநீரால் சண்முகம், குப்புசாமி, ரதி, சந்திரன் உள்ளிட்ட 15 பேரின் வீடுகளுக்குள் தரை தளத்தை பிளந்து கொண்டு 'குபுகுபு'வென்று ஊற்றெடுத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குமார் மற்றும் அவருடைய சகோதரர்கள் ரொட்டிக்காரவட்டத்தில் இருந்து கோயில் மரம் என்ற இடத்திற்கு இடம்மாறிச் சென்றுவிட்டனர். எந்த நேரமும் சுவர்கள் நீரில் ஊறிக்கொண்டே இருந்ததால் இரண்டு பேரின் பேக்கரி தயாரிப்புக்கூடங்கள் இடிந்து விழுந்து விட்டன.


இது ஒருபுறம் இருக்க, அக். 21ம் தேதி இரவு முதல் காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவுநீர், பூமிக்கடியிலேயே ஒரு கி.மீ. தூரத்திற்கு பாய்ந்தோடி வருகிறது. இந்த தண்ணீர், சித்தனூர், ரொட்டிக்காரவட்டத்தில் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோருக்குச் சொந்தமான வயல்களை மூழ்கடித்துள்ளன. 

salem district aavin milk company water drop at lake


இதனால், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்றுகூறி, கடந்த ஒரு வாரமாக தளவாய்ப்பட்டி, சித்தனூர், ரொட்டிக்காரவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் போராடி வருகின்றனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். மக்களிடமும் கருத்து கேட்டனர். அதையடுத்து, பால் பண்ணையில் கிழக்குபுறத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மேற்கு புறத்தில் கால்நடை தீவனம் பயிரிடப்பட்டுள்ள பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. ஆனாலும், அந்த தண்ணீர் சுற்றுச்சுவரை துளைத்துக்கொண்டு வெளியேறியது. 

salem district aavin milk company water drop at lake



அதன்பிறகு, அக். 23ம் தேதி காலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் ஆவின் பொது மேலாளரை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னைகளைக் கூறினர். தற்காலிக தீர்வாக, ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரிக்குள் கொண்டு செல்லலாம் என்ற யோசனையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், மாலையில் விவசாயிகளை அமைப்பைச் சேர்ந்த மாதேஸ்வரன், திருவேங்கடம் ஆகியோர், தளவாய்ப்பட்டி ஏரிக்குள் ஆவின் கழிவு நீரை கொண்டு வந்தால் ஏரிக்குக் கீழ் பகுதியில் விவசாயம் அடியோடு பாதிக்கும் என்ற பிரச்னையை முன்வைத்தனர்.


இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ''தளவாய்ப்பட்டி ஏரி இன்னும் முழுமையாக தூர்வாரப்படவில்லை. ஆழமும் குறைவாக உள்ள இந்த ஏரியில் கனமழை வந்து, அந்த தண்ணீர் தேங்கினாலே கரைக்கு மேலே வந்துவிடும் அபாயம் இருக்கிறது. அத்துடன் ஆவின் கழிவு நீரும் சேர்ந்தால் நிச்சயமாக கரையைக் கடந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து விடும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.

salem district aavin milk company water drop at lake


இதனால் ஏரிக்கு கீழ்ப்புறத்தில் இருந்து கஞ்சமலை வரை கரும்பு, நெல், கடலை விவசாயம் செய்து வரும் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், இந்த ஏரியில் தண்ணீர் ஓடிச்செல்லும் வகையில் இல்லாமல் தேங்கியே கிடக்கிறது. அப்படியான நிலையில் ஆவின் கழிவுநீரையும் கொண்டு வந்து தேக்கி வைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல,'' என்றனர். 


அக். 23ம் தேதி மாலையில் நாமும் (நக்கீரன்) தளவாய்ப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டோம். ஏரிக்கரை பலமின்றி இருந்தது. இந்த ஏரியின் கழுங்கு பகுதியில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் வழியாக ஆவின் தண்ணீரை கொண்டு சென்றாலும் அப்பகுதி மக்களும் எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது.


இதற்கிடையே, இரவு 7 மணியளவில் ஆவின் மேலாளர் மெய்யழகன் (சிவில்) தலைமையில் ஊழியர்கள் சிலர், பொக்லின் இயந்திரங்களுடன் தளவாய்ப்பட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு எதிரில் ஆவின் சுற்றுச்சுவரை துளையிட்டு, அதில் பிவிசி குழாய் பொருத்தி, அதன்மூலம் பண்ணையில் இருந்து கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்து விடுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த விவசாய அமைப்பைச் சேர்ந்த திருவேங்கடம், மாதேஸ்வரன் மற்றும் ஊர் மக்கள் சார்பில் சிவராமன், தோழர் சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்விடத்தில் கூடினர். அவர்கள் உடனடியாக பணிகளை நிறுத்தும்படி கூறினர். எக்காரணம் கொண்டும் ஏரிக்குள் ஆவின் தண்ணீரை விடக்கூடாது என்றனர். இதையடுத்து ஆவின் ஊழியர்கள் அப்பணிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

salem district aavin milk company water drop at lake


அதையடுத்து, உடனடியாக தளவாய்ப்பட்டி சமுதாயக்கூடத்தில் ஊர் மக்கள் கூடி பேசினர். அதில், ஆவின் நிறுவன கழிவு நீரை, நிரந்தர மற்றும் நீண்டகாலத் தீர்வாக திருமணிமுத்தாற்றில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு ரொட்டிக்காரவட்டம், சித்தனூரைச் சேர்ந்த தங்கராஜ், நாராயணன் உள்ளிட்டோரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக ஆவின் பொது மேலாளரை சந்தித்துப் பேசவும் முடிவெடுத்துள்ளனர்.


தளவாய்ப்பட்டி மக்களின் நாற்பதாண்டு கால பிரச்னையை ஆவின் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கருதி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.





 

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.