Skip to main content

என் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே - "கிரிக்கெட் கடவுள்" சச்சின் டெண்டுல்கர்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
sachin




ஆகஸ்ட் 24, 2007 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. கங்குலியும், சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய காலம் அது. தொடக்கமே பவுண்டரிகளும் ஓட்டங்களுமாகவே ஆரம்பித்து சிறப்பாக போய்க்கொண்டிருந்தது. சச்சின் ஆடிய ஆட்டம் சென்ச்சூரி நிச்சயம் என்று ரசிகர்கள் கொண்டாட ஆயத்தமாகினர். 90 ரன்கள் அடிப்பதற்கு முன்னர்வரை சச்சின் அடிக்க முடிந்த பந்துகளை அல்வா சாப்பிடுவது போன்று லாவகமாகவும், சூச்சமமான பந்துகளை டொக் வைத்தும் அதாவது நிறுத்தியும் விளையாடினார். சச்சின் எப்பொழுதும் 90 ரன்களை கடந்து விட்டால் மட்டும், அவரது கால்களும் பேட்டிங்கும் எதோ ஒரு மாதிரியாக மாறிவிடும். சொல் பேச்சு கேட்காத குழந்தையை போன்றாகிவிடும். அதை பார்க்கும் போது எப்படியாவது சச்சின் நூறை கடந்துவிட  வேண்டும் என்று மனதிற்குள் ரசிகர்களின் பூஜை தொடங்க ஆரம்பிக்கும், அதேபோல அன்றும் நடந்தது.

 

சச்சின் ஏதேதோ விளையாண்டு 99 ரன்களில் வந்து நின்றார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 180 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. சச்சின் எம் ஆர் எப் பேட்டுடன் அந்த பந்திற்காக ஆயத்தமாக, எதிரே யுவராஜ் சிங் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நிற்க, அரக்கனை போல நெஞ்சை விரித்து கொண்டு பிளிண்டாப் பவுலிங் போட ஓடிவந்து, அரைக்குழி பந்து என்று சொல்லப்படும் பவுன்சரை சச்சினின் இடப்பக்கம் போவது போல் போட, அதை விடுவதா, வேணாமா என்ற இருமனத்தோடு அதைவிடும்பொழுது முழங்கை பேடில் பட்டு பந்து கொஞ்சம் நகர, அதை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பறந்துபோய் பிடித்து அவுட் என்று கேட்க, சச்சின் இல்லை என்று தனக்கு தானே தலை ஆட்டிக்கொண்டிருக்கும் போது, நடுவர் அவுட் என்று அறிவித்துவிடுவார். சச்சின் ஒன்றும் சொல்லமுடியாமல் சிரித்துக்கொண்டே பெவிலியன் திரும்புவார். அவ்வளவுதான் ரசிகர்களின் வேண்டுதல் எல்லாம் அன்று  பலித்திருக்காது. சிலர் அழுதிருக்கக் கூடும், சிலர் டிவியை ஆப் செய்திருக்க கூடும், சிலர் பிக்சிங் என்று திட்டியிருக்க கூடும். இவ்வாறு பல விஷயங்கள் நேர்ந்திருக்கும்.


 

sachin

 

இந்த இங்கிலாந்து தொடருக்கு முன் ஜூன் மாதம்  நடந்த சவுத் ஆப்ரிக்கா தொடரின் முதல் ஒரு நாள் போட்டியிலும் சச்சின் 99 ரன்கள் எடுத்து சென்சூரியை சுவைக்க நேரிடும் போது  ரன் அவுட்டாகி வெளியேறிவிடுவார். இங்கிலாந்து தொடருக்கு பின் நடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இதே போன்று சச்சின் 99 ரன்களில் இருக்கும்போது உமர் குல் வீசிய பந்தை கவர் டிரைவ் அடிக்க சென்று, பந்து பேட்டில் டிப்பாகி பின்னே நிற்கும் விக்கெட் கீப்பராக நிற்கும் கம்ரான் அக்மல் கையில் மாட்டிக்கொள்ளும். அந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை 99 ரன்களில் இருக்கும்போது சென்ச்சூரி மிஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் சச்சின். கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று எல்லாம் சொல்லப்பட்டு வந்த சச்சினுக்கு இந்த 90 ரன்களில் இருந்து 100 ஐ கடப்பது பெரும் சவாலாகவே இருந்துள்ளது. நாம் கிரிக்கெட் விளையாடும் போது கூட, ஐம்பது என்பது நமக்கு அபூர்வமான ஒன்றுதான் இருந்தபோதிலும் அதை கடக்க சச்சினை போன்று சிரமம்படுகிறோம் என்று பீத்தி கொள்வதும் உண்டு. எல்லாவற்றையும் நமக்கு கற்பித்தவர் இதையும் விட்டுவைக்கவில்லை. "சச்சின் மட்டும் நூறு போட்றட்டும் அப்பறம் பாரு எப்படி நாலா பக்கமும் அடிக்கிறார்னு" இப்படியெல்லாம் நாம் பேசமாட்டோம். இந்த 90 முதல் 99 ரன்களுக்குள் அந்தளவிற்கு அது அனைவருக்கும் நெருக்கடியாக இருக்கும்.

 

கிரிக்கெட்டில் இது சச்சினுக்கு மட்டுமல்ல, பெரிய தலைகள் பலருக்கும் இந்த கஷ்டம் நேர்ந்திருக்கிறது. இதை ஒரு நோயாகவே பார்த்தனர். இதற்கு ஒரு பெயரும் உண்டு அதுதான் "நெர்வஸ் நைன்டீஸ்". அதாவது தொண்ணுறு ரன்களில் இருந்து நூறை கடக்கமுடியாமல், அவுட்டாகி வெளியேறுவதை கிரிக்கெட் வட்டாரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். பேட்ஸ்மேன் ஒருவர் சரளமாக அடித்து தொம்சம் செய்து 90 ரன்களை கடந்த பிறகு எப்படியாவது நூறை தொட்டுவிட வேண்டும் என்கிற பயத்திலேயே கோட்டை விட்டுவிடுகின்றனர். சில சமயங்களில் அதிர்ஷ்டம் இன்மையும் என்றும் கூட அதை சொல்லலாம். சச்சின் கிரிக்கெட்டில் தொடாத சாதனைகளே அல்ல, தற்போது யாரேனும் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தால் முக்கால்வாசி சாதனைகள் அவருடையதாகவே இருக்கக்கூடும். "டெஸ்ட் மற்றும் ஒண்டே மேட்சுகளை சேர்த்து 100  சதங்கள், 30,000 க்கும் மேற்பட்ட ரன்கள், முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் தொட்டவர்." என்று சாதனைகளை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். அதை போலவே "நெர்வஸ் நைன்டீஸ்" என்று சொல்லப்படும் இந்த 90 முதல் 99 ரன்களுக்குள் சதத்தை மிஸ் செய்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதல் இடத்தில் இருக்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் நெர்வஸ் நைன்டீஸ் கட்டத்தில் 27 முறை அவுட்டாகி இருந்திருக்கிறார். அப்போது என்றால் அத்தனை முறை பிராத்தனைகள் நிறைவேறாமல் இருந்திருக்கிறதா? இருக்கலாம். 

 

sachin

 

ஒருமுறை சச்சினின் மகன் அர்ஜுன் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொன்னாராம், " அப்பா நீங்க ஏன் 94 ரன்ஸ் இருக்கும்போது சிக்ஸ் அடிச்சு சென்சூரி வர கூடாதா? என்று, சச்சின் சிரித்தாராம். அதேபோல இந்த நெர்வஸ் நைன்டீஸ் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு " எனக்கு எனது சென்சூரி முக்கியமல்ல, என் தேசம் நான் பெற்ற ரன்களால் வெற்றியடைந்ததா அதுதான் எனக்கு தேவை, மற்றபடி என் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே " என்று கூறியிருக்கிறார் இந்த கிரிக்கெட் கடவுள்.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்